உலகக்கோப்பை வாய்ப்பு மறுப்பு
2019 உலகக்கோப்பை தொடரில் முறைப்படி அணிக்கு மாற்று வீரராக இருந்த அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மாற்று வீரர் பட்டியலில் இல்லாத, ஒருநாள் அணியில் இதுவரை ஆடி இராத மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.
யூ-டர்ன் போட்டார்
அப்போது மனம் வெறுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு. எனினும், அடுத்த சில மாதங்களில் தான் மீண்டும் ஹைதராபாத் அணிக்காக ஆட இருப்பதாக கூறினார்.
ஹைதராபாத் அணி
ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக சையது முஷ்டாக் அலி தொடரில் செயல்பட்டார் அம்பதி ராயுடு. அடுத்து ரஞ்சி ட்ராபி தொடரில் ஆட திட்டமிட்டு இருந்தார். 2020 ஐபிஎல் தொடருக்கான அணியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தக்க வைத்துக் கொண்டது.
தலைவர் ஆன அசாருதீன்
இதற்கிடையே, ஹைதராபாத் மாநில கிரிக்கெட் அமைப்பின் தேர்தலில் வெற்றி பெற்றார் முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன். கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற அதே நேரத்தில், அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவி ஏற்றார்.
ராயுடு புகார்
அவர் பதவி ஏற்று ஒரு மாதம் ஆன நிலையில், அம்பதி ராயுடு ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் மீது பரபரப்பு புகார் கூறி இருக்கிறார். ஹைதராபாத் மாநில அணியில் தகுதி இல்லாத பணக்காரர், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு கொண்டவர்களின் பிள்ளைகள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறி உள்ளார் ராயுடு.
அணியில் அரசியல்
அவர் கூறுகையில், "நான் ஹைதராபாத் அணிக்காக இந்த சீசன் ரஞ்சி தொடரில் ஆடலாம் என்று இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, எண்ணப்படி அனைத்தும் நடைபெறவில்லை. அணிக்குள் நிறைய அரசியல் உள்ளது. நல்ல கிரிக்கெட் ஆடக் கூடிய சூழல் அங்கே இல்லை. எனக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது" எனக் கூறினார்.
ஒன்றும் நடக்கவில்லை
மேலும், "நான் இது குறித்து தலைவரிடம் பேசினேன். அவர் எப்போதும் தன் சிறப்பான முயற்சியை செய்வதாக கூறுகிறார். ஆனால், அது நடக்கவே இல்லை. அவர் அதிரடி நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், அவர் அதை செய்யவில்லை" என்றார்
தேர்தல் வாக்குறுதி
"நிறைய தேர்தல் வாக்குறுதிகள் இருக்கின்றன. அதனால், விளையாட்டு பாதிக்கப்பட்டுள்ளது. அது என்னை கடுமையாக பாதித்துள்ளது. சில வீரர்கள் அணியில் இருக்க தகுதியே இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதி காரணமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று அசாருதீன் மீது அதிரடி புகார் கூறி இருக்கிறார் ராயுடு.
வீரர்களை நீக்க முடியவில்லை
மேலும், "இப்படி இருந்தால் அணி எப்படி முன்னேறும்? சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் களமிறங்கும் 11 வீரர்களை தேர்வு செய்யும் போது என் கைகள் கட்டப்பட்டு இருந்தன. சில வீரர்களை தொட முடியாத நிலை இருந்தது" என்றார்.
பணக்காரர்களின் பிள்ளைகள்
"நீங்கள் அணியைப் பார்த்தால், சில வீரர்கள் சில கிளப் செயலாளர்களின் செல்வாக்கால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். திறமை பின்னே தள்ளப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டம். பணக்காரர், அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு கொண்டவர்களின் பிள்ளைகளுக்கு ஹைதராபாத் அணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. யாராவது இதைப் பற்றி பேச வேண்டும். நான் இதைப் பற்றி பேசினால் என்ன என நினைத்தேன்." எனக் கூறி இருக்கிறார் அம்பதி ராயுடு.
அசாருதீன் இந்தப் புகார்களுக்கு பதில் அளிப்பாரா?