நீதிமன்ற கட்டுப்பாடு
பிசிசிஐ கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பிசிசிஐ-யில் நடந்த அதிகார மோதல் மற்றும் குளறுபடிகள் தான் அதற்கு மறைமுக காரணம். உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தான் இது நாள் வரை பிசிசிஐ-யை வழிநடத்தி வந்தனர்.
நீண்ட காலத்திற்குப் பின் தேர்தல்
நிர்வாக கமிட்டியின் செயல்பாடுகள் பிசிசிஐ அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பி இருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த விதிகளை அமல்படுத்தி இருக்கும் பிசிசிஐ, தேர்தலை சந்திக்க உள்ளது.
அரசியல் லாபி
இது வரை பிசிசிஐ அதிகாரம் இல்லாமல் தவித்து வந்த பல அதிகார குழுக்களும், எத்தனை மோதல்கள், பகை இருந்தாலும் இந்த முறை தேர்தல் இல்லாமல் தங்களுக்குள் பேசி போட்டியின்றி பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தன.
பெரும் அரசியல்
மேலும், பதவியை பிடிப்பதில் பெரும் அரசியல் தாக்கமும் இருந்தது. இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்த முறை ஒரே கட்சியை சேர்ந்தவர்களே அதிக அளவில் பதவிகளை பிடித்துள்ளதாக தெரிகிறது.
யாருக்கு பதவி?
பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும், நிதித் துறை இணை அமைச்சர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குரின் சகோதரர் அருண் துமால் பொருளாளர் பதவியிலும் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தலைவர் பதவி
இந்த நிலையில், தலைவர் பதவியில் அனைவரும் ஒப்புக் கொள்ளும் நபரை நியமிக்க கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது கங்குலிக்கு வாய்ப்பு இல்லாத நிலை தான் இருந்தது.
சீனிவாசன் காய் நகர்த்தல்
அதே சமயம், சிஎஸ்கே அணி உரிமையாளரும், முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவர் சீனிவாசன் தனக்கு ஆதரவான பிரிஜேஷ் பட்டேல் என்பவரை தலைவர் ஆக்க கடுமையாக முயன்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
ஐபிஎல் தலைவர் பதவி பேரம்
அதனால், கங்குலியை தலைவர் பதவியில் அமர்த்த பேரம் நடந்துள்ளது. அதன்படி, கங்குலி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். சீனிவாசன் ஆதரவு பெற்ற பிரிஜேஷ் பட்டேல் முக்கியமான ஐபிஎல் தலைவர் பதவியை பெறுவார் என முடிவாகி இருக்கிறது.
கங்குலி வரக் காரணம்
அனைவரும் கங்குலியை தலைவர் பதவியில் அமர்த்த ஒப்புக் கொள்ள முக்கிய காரணம் உள்ளது. ஏற்கனவே, நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்தன, கிரிக்கெட் வீரர்கள் சார்ந்த நடவடிக்கைகளை விட பிசிசிஐயில் அரசியல் உள்குத்து தான் அதிகம் என்ற எண்ணம் சாதாரண கிரிக்கெட் ரசிகன் முதல் உச்சநீதிமன்றம் வரை உள்ளது.
குரு டால்மியா வழி
இதை மாற்ற பல மாநில கிரிக்கெட் அமைப்புகள் தேர்வு செய்த முகம் தான் கங்குலி. கங்குலி, முன்னாள் பிசிசிஐ தலைவர் டால்மியாவின் வழியில் கிரிக்கெட் நிர்வாக அதிகாரத்துக்குள் நுழைந்தவர். தன் குருவைப் போலவே செயல்பட்டு கடும் அரசியல் லாபிக்கு நடுவே பிசிசிஐ தலைவர் பதவியை பிடித்துள்ளார் கங்குலி.