5வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் 5வது போட்டி இன்றைய தினம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே அடித்தது.
சொற்ப ரன்களில் வெளியேறிய வீரர்கள்
துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 43 ரன்களையும் சூர்யகுமார் யாதவ் 56 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவின்டன் டீ காக் 2 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பௌலிங்கில் அவுட்டாகி வெளியேறினார்.
5 விக்கெட்டை வீழ்த்திய ரஸ்ஸல்
இந்நிலையில் இறுதி இரண்டு ஓவர்களில் அணியின் ஸ்கோர் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுட் எண்ணிக்கை மட்டுமே உயர்ந்தது. அணியின் ஆன்ட்ரே ரஸ்ஸல், இறுதி 2 ஓவர்களை பௌலிங் செய்த நிலையில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அடுத்தடுத்த விக்கெட்டுகள்
கீரன் பொல்லார்ட், மேக்ரோ ஜான்சன், க்ருணால் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ராகுல் சஹர் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகினர். இதன்மூலம் ஐபிஎல்லில் தனது முதல் 5 விக்கெட் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரஸ்ஸல். இதனிடையே டெத் ஓவர்களில் ரன்கள் உயரும் அபாயத்தை தவிர்க்கும் வகையில் தான் பௌலிங் செய்ததாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தியதாகவும் ரஸ்ஸல் குறிப்பிட்டுள்ளார்.
சாதித்த ரஸ்ஸல்
கடந்த 9ம் தேதி மும்பைஇந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி பௌலர் ஹர்ஷல் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டியை மாற்றிய நிலையில், தற்போது அதே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் ரஸ்ஸல்.