லக்னோ: நோபால் வீசியதாக அறிவித்த கிரிக்கெட் நடுவரின் தங்கைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய ஒரு பவுலர் முயன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டை தொடர்ந்து, நாடு முழுக்க 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் ஜராரா என்ற குட்டி நகரத்திலும் கிரிக்கெட் தொடர்கள் அவ்வப்போது நடத்தப்படுகிறது.
ஜேபிஎல் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை சுற்றுவட்டார ஊர் கிரிக்கெட் இளைஞர்கள் சேர்ந்து நடத்தி வருகிறார்கள். இதேபோன்று மே 28ம் தேதி ஜராரா மற்றும் பாரிகி ஊர்கள் நடுவே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் நடுவராக நின்ற ராஜ்குமார், நோ-பால் கொடுத்தாராம். அது நோபால் இல்லை என்று விளையாட்டு வீரர் சந்தீப் பால் நடுவரிடம் தகராறு செய்துள்ளார். இருப்பினும் தனது முடிவில் ராஜ்குமார் உறுதியாக இருந்ததால், கோபமடைந்த சந்தீப் பால், "ஒழுங்காக முடிவை மாற்றாவிட்டால், உன் குடும்பத்தில் ஒருவர் இருக்க மாட்டார்" என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் இவ்வாறு சண்டை போட்டு மிரட்டல்விடுப்பது சகஜம் என்பதால் ராஜ்குமாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். இதையடுத்து நோ-பால் அறிவிப்பை அவர் வாபஸ் வாங்கவில்லை.
இதனால் கோபத்தில் இருந்த சந்தீப்பால், மறுநாளே, ராஜ்குமாரின் தங்கை பூஜா (15) மற்றும் அவரின் தோழிகள் மூவர் வயலுக்கு நடந்து சென்றபோது வழி மறித்துள்ளார். அவர்களிடம் கூல் டிரிங்ஸ் குடிக்குமாறு கூறி ஒரு பானத்தை தந்துள்ளார். பூஜாவுக்கு ஏற்கனவே சந்தீப் பால் அறிமுகமானவர் என்பதால் அவரும், தோழிகளும் நம்பி குடித்துள்ளனர்.
சில நிமிடங்களில் பூஜா மற்றும் அவரின் தோழிகள் மயங்கி சாய்ந்தனர். இதில் பூஜா உயிரிழந்த நிலையில், பிற மூன்று சிறுமிகளுக்கும் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க கிராம பஞ்சாயத்து தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.