பஞ்சாப் அணியில் கும்ப்ளே
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பிளே - ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. அதை மாற்றி வெற்றி நடை போட 2020 ஐபிஎல் தொடரில் அனில் கும்ப்ளேவை புதிய பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது.
ஐபிஎல் பதவிகள்
அனில் கும்ப்ளே இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார். தற்போது முதன் முறையாக ஐபிஎல் அணி ஒன்றின் பயிற்சியாளர் பதவியில் அமர்ந்துள்ளார்.
இந்திய அணி பயிற்சியாளர்
முன்னதாக அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பதவி விலகினார். அதன் பின் வர்ணனையாளராகவும், பல்வேறு கிரிக்கெட் நிர்வாகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார் கும்ப்ளே.
இலக்கு என்ன?
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் அனில் கும்ப்ளேவின் முதல் இலக்கு, பஞ்சாப் அணியை பிளே - ஆஃப் அழைத்துச் சென்று கோப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பது தான்.
அனில் கும்ப்ளேவின் அணுகுமுறை
அனில் கும்ப்ளே கட்டுக் கோப்பான, தீவிரமான பயிற்சியாளர் என்றே பொதுவான பார்வை உள்ளது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது அப்படி தான் நடந்து கொண்டார். வீரர்கள் இடையே ஒரு ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் கும்ப்ளே.
கும்ப்ளேவின் மாற்றம்
அதே போலத் தான் தற்போதும் ஐபிஎல் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என எதிர்பார்த்தால், அப்படியே மாறி இருந்தது அவரின் அணுகுமுறை. அதிரடி ஒழுங்குமுறைகள் பற்றி அவர் எதுவுமே பேசவில்லை.
கும்ப்ளே பேச்சு
ஐபிஎல் அணியில் தன் திட்டம் குறித்து பேசிய போது வீரர்களை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள உதவி விட்டு நாம் பின் வாங்கி விட வேண்டும் எனக் கூறிய அனில் கும்ப்ளே, தான் முந்தைய அனுபவத்தில் இருந்து தான் கற்றுக் கொண்டது இது தான் என்றும் கூறி அதிர வைத்து இருக்கிறார்.
எளிதாக இருக்க வேண்டும்
அவர் கூறுகையில், வேலையை நாம் எளிதாக மாற்றிக் கொண்டால், எல்லாம் எளிதாக இருக்கும். முடிவுகள், வெற்றிகள், கோப்பைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது வீரர்கள் அழுத்தம் அடைவார்கள் என்றார்.
ரிலாக்ஸ் தான் முக்கியம்
மேலும், வீரர்களை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொண்டு நாம் பின்வாங்கி விட வேண்டும் என்பதை தான் நான் கற்றுக் கொண்டேன். அவர்கள் ரிலாக்ஸ் ஆக இருந்தால் சிறப்பாக செயல்படுவார்கள் என்றார்.
ஐபிஎல் வேறு மாதிரி
நீங்கள் வீரராக, பயிற்சியாளராக முந்தைய அனுபவங்கள் கொண்டு இருக்கலாம். ஆனால், ஐபிஎல் ரோலர்கோஸ்டர் பயணம் போன்றது. நாம் அமைதியாக இருந்து, வீரர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் கும்ப்ளே.