அனில் கும்ப்ளே
இந்நிலையில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பளே-வை மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக்கும் முடிவில் பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியாக இருப்பதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பதவியில் இருந்து விலகினார். 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானோடு தோற்ற பிறகு, பதவியில் இருந்து விலகினார் கும்ப்ளே. அதன் பிறகு தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கங்குலியின் ஆர்வம்
இப்போது சாஸ்திரி பதவி விலகும் நிலையில், மீண்டும் கும்ப்ளே-வை நியமிக்க கங்குலி முடிவுடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில், விராட் கோலிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், கடந்த கால வரலாறு அப்படி. "வீரர்களை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை; பள்ளிக் குழந்தைகளைப் போல கட்டுக்கோப்புடன் வைத்திருக்க நினைக்கிறார்" என்ற கும்ப்ளே மீது கோலி தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட, விரக்தியுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட கடும் எதிர்வினையாற்றினார். "உங்களை ஜாலியாக இருக்க விட்டால் தான் அணியில் பயிற்சியாளர் நீடிக்க முடியுமோ?" என்று காட்டமாக எதிர்வினையாற்றினார்.
லக்ஷ்மனுக்கும் வாய்ப்பு
ஆனால், அப்போது விராட் கோலியின் ஆளுமைக்கு முன்பு எதுவும் செல்லுபடியாகவில்லை. கும்ப்ளே வெளியேறினார்.. ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார். இப்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும், கும்ப்ளே அணியின் கோச் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்திருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் அவர் தான். ஸோ, மீண்டும் கும்ப்ளேவை சந்திக்கும் இக்கட்டான சூழல் கோலிக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், விவிஎஸ் லக்ஷ்மனுக்கும் பயிற்சியாளராகும் வாய்ப்பு உள்ளது. அப்படி லக்ஷ்மன் தேர்வு செய்யப்பட்டால், கோலிக்கு அது ஆறுதலாக அமையும்.
கனவாகவே போகும் நிலை
இப்போது கோலி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கும்ப்ளே என்ட்ரியை தடுப்பாரா? அல்லது கங்குலி தனது முடிவில் விடாப்பிடியாய் இருந்து கும்ப்ளே-வை அணிக்குள் கொண்டு வருவாரா? என்பதே கேள்வி. ஆனால், இப்போது சிக்கல் என்னவெனில், ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே செயல்பாடு மீது அந்த அணியின் நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 6 ஆட்டங்களில் பஞ்சாப் அணி தோற்றுள்ளது. மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது அந்த அணிக்கு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கும்ப்ளேவின் பயிற்சி
கும்ப்ளே-வின் இந்த செயல்பாட்டை பிசிசிஐ-யும் கூர்ந்து கவனித்து வருவதாக தெரிகிறது. நன்றாக விளையாடும் போட்டியில், கடைசி நேரத்தில் தோற்பது என்பது பஞ்சாப் அணியின் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான 5 ரன்கள் கூட அடிக்க முடியாமல் பஞ்சாப் தோற்றது பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. 19 ஓவர்கள் வரை ஆட்டத்தில் முழுமையாக டாமினேட் செய்த பஞ்சாப், கடைசி ஓவரில் மிக மோசமாக சொதப்பி தோற்றது. இதுபோன்று வெற்றிப் பெற வேண்டிய ஆட்டத்தில் தோற்பது தொடர்ந்து வருகிறதே தவிர, பயிற்சியாளர் கும்ப்ளேவால் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐபிஎல்-ன் வெற்றி, தோல்வி அளவீடு சர்வதேச கிரிக்கெட்டில் கருத்தில் கொள்ளப்படாது என்றாலும், தொடர்ந்து பஞ்சாப் அணி தோற்பது கும்ப்ளேவின் பயிற்சியை கேள்விக்கு ஆக்கியுள்ளது.