பிசிசிஐ முடிவுக்கு வரவேற்பு
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக நடக்கும் என்று முன்னாள் கேப்டன் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள தற்போதைய சூழலில் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் போட்டிகளை நடத்தும் பிசிசிஐயின் முடிவுக்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் நடத்த பிசிசிஐ முடிவு
கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள், கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஒரே இடத்தில் போட்டிகள்
ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராகவும் உள்ள அனில் கும்ப்ளே, ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் சூழலில் 3 அல்லது 4 இடங்களில் போட்டிகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் வீரர்கள் ஒரே இடத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
விவிஎஸ் லஷ்மனும் அறிவுறுத்தல்
இதனிடையே கும்ப்ளேவின் கருத்தையே முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான விவிஎஸ் லஷ்மனும் வலியுறுத்தியுள்ளார். 3 அல்லது 4 மைதானங்கள் இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கேயே ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நடத்த அவர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் விமானம் உள்ளிட்டவற்றின்மூலம் வீரர்கள் மற்ற இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.