இரட்டை ஆதாய சிக்கல்
பிசிசிஐயில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஒருவர் பிசிசிஐயில் ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும். மேலும், ஒரு பதவியின் மூலம் மற்றொரு பதவியில் ஆதாயம் பெற சாத்தியம் இருக்கக் கூடாது என கூறப்படுகிறது.
டிராவிட் விவகாரம்
இந்த நிலையில் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பல ஆண்டுகளாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கௌரவ பதவியில் இருக்கிறார். அந்த பதவியை விட்டால் தான் பிசிசிஐ பதவி கிடைக்கும் என்ற நிலையில், டிராவிட் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டு, பிசிசிஐ பதவியை பெற்றார்.
சிஎஸ்கே அணி
அப்போது டிராவிட்டுக்கு அனுமதி அளித்து பதவியை கொடுத்த பிசிசிஐ, தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பாக, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்பதால் டிராவிட் இரட்டை ஆதாயம் பெறுகிறார் என்று கூறி வந்த புகாரின் அடிப்படையில் பிசிசிஐ விசாரணை நடத்தத் துவங்கி உள்ளது.
முன்னாள் வீரர்கள் கொந்தளிப்பு
இது குறித்து முன்னாள் வீரர்கள் கொந்தளித்துப் போய் கருத்து கூறி உள்ளனர். கங்குலி இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார். ஹர்பஜன் சிங் கூறுகையில், டிராவிட் போன்ற ஜாம்பவான்களை அவமானப்படுத்தும் செயல் என்றார்.
அனில் கும்ப்ளே கருத்து
அனில் கும்ப்ளே கூறுகையில், நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு வேலையிலும் ஆதாயம் பெறும் வாய்ப்பு இருக்கும். அதை எப்படி தீர்க்க வேண்டும் என்றால், வேலை பெறும் முன்பே எந்தெந்த பதவிகளால் சிக்கல் வரும் என கூறி விடுவது தான். அது அனைவருக்கும் தெரிந்து விட்டால் எந்த சிக்கலும் வராது என் கூறினார்.
நாங்க வேண்டாமா?
மேலும், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதே ஆதாய சிக்கலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதிலும் சில வீரர்கள் மட்டுமே பணிகளில் ஈடுபட முடியும். 300 வீரர்கள் தான் நாட்டுக்காக கிரிக்கெட் ஆடி உள்ளனர் என்றார்.
மனக்குமுறல்
அதில் பாதி பேர் தான் இப்போது வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்த விளையாட்டுக்காக திருப்பி செய்ய வேண்டாம் என்றால் வேறு யாரையாவது கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ள தேடிக் கொள்ளுங்கள் என கூறி தன் மனக் குமுறலை கொட்டி இருக்கிறார் அனில் கும்ப்ளே.