கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி இடையில் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. அதிரடியாக ஆடி தனது அணியின் முதல் வெற்றியை அணியின் கேப்டன் உள்ளிட்டவர்கள் உறுதி செய்தனர்.
கும்ப்ளே பாராட்டு
இந்நிலையில் அணியில் சிறப்பாக பந்து வீசி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர்கள் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னோய் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சொற்ப ரன்களே கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய இவர்களது சாதனை குறித்து அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரவி பிஸ்னோய் மகிழ்ச்சி
இதனிடையே, போட்டியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பௌலர் ரவி பிஸ்னோய், தொடர் துவங்கும் முன்னதாக தங்களது பயிற்சி ஆட்டத்தின்போது தாங்கள் தங்களது மனவலிமையை பெருக்கிக் கொள்ளவே தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அதிக பயிற்சிகளை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அனில் கும்ப்ளே அறிவுறுத்தல்
மேலும் மன அமைதியுடன் தன்னுடைய திறமைகளை கையாளுமாறு அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனக்கு தொடர்ந்து அறிவுறுத்தியதாகவும், அது இந்த போட்டியில் தனக்கு சிறப்பாக கைகொடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார். ஆர்சிபி அணியை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அவுட் செய்து வெளியேற்றவே தாங்கள் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.