மீண்டும் கோச்?
இந்நிலையில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பளே-வை மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக்கும் முடிவில் பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியாக இருப்பதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்டஉரசல் காரணமாக பதவியில் இருந்து விலகினார். 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானோடு தோற்ற பிறகு, பதவியில் இருந்து விலகினார் கும்ப்ளே. அதன் பிறகு தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பதவி விலகிய கும்ப்ளே
இப்போது சாஸ்திரி பதவி விலகும் நிலையில், மீண்டும் கும்ப்ளே-வை நியமிக்க கங்குலி முடிவுடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில், விராட் கோலிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், கடந்த கால வரலாறு அப்படி. "வீரர்களை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை; பள்ளிக் குழந்தைகளைப் போல கட்டுக்கோப்புடன் வைத்திருக்க நினைக்கிறார்" என்ற கும்ப்ளே மீது கோலி தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட, விரக்தியுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட கடும் எதிர்வினையாற்றினார். "உங்களை ஜாலியாக இருக்க விட்டால் தான் அணியில் பயிற்சியாளர் நீடிக்க முடியுமோ?" என்று காட்டமாக எதிர்வினையாற்றினார்.
சாஸ்திரி என்ட்ரி
ஆனால், அப்போது விராட் கோலியின் ஆளுமைக்கு முன்பு எதுவும் செல்லுபடியாகவில்லை. கும்ப்ளே வெளியேறினார்.. ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனார். இப்போது 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும், கும்ப்ளே அணியின் கோச் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்திருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் அவர் தான். ஸோ, மீண்டும் கும்ப்ளேவை சந்திக்கும் இக்கட்டான சூழல் கோலிக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், விவிஎஸ் லக்ஷ்மனுக்கும் பயிற்சியாளராகும் வாய்ப்பு உள்ளது. அப்படி லக்ஷ்மன் தேர்வு செய்யப்பட்டால், கோலிக்கு அது ஆறுதலாக அமையும்.
கோலி தடுப்பாரா?
இப்போது கோலி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கும்ப்ளே என்ட்ரியை தடுப்பாரா? அல்லது கங்குலி தனது முடிவில் விடாப்பிடியாய் இருந்து கும்ப்ளே-வை அணிக்குள் கொண்டு வருவாரா? என்பதே கேள்வி. நான் ஏன் இவ்வளவு உறுதியாக கோலி, கும்ப்ளேவின் வருகையை அனுமதிக்கமாட்டார் என்று கூறுகிறேன் என்றால், சார் செய்து வைத்த சில்லறை வேலை அப்படி. 2016ம் ஆண்டு கும்ப்ளே கோச் ஆன போது, தனது சமூக தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து "வருக.. வருக கோச்" என்று புகழ்பாடியிருந்த விராட் கோலி, அவர் பதவி விலகிய பிறகு அந்த போஸ்ட்டையே டெலிட் செய்துவிட்டார். இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு கும்ப்ளேவை அவர் மீண்டும் எதிர்கொள்வார்? வாடகைக்கு ஏதாவது முகத்தை வாங்கி வைத்துக் கொண்டால் தான் உண்டு! பொறுத்திருந்து பார்ப்போம்!.