டிவிட்டரில் போலி கணக்கு
முன்னாள் இந்திய ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் தன்னுடைய கேரியராக கிரிக்கெட்டையே தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில், இவரது பெயரில் டிவிட்டரில் ஜூனியர் டெண்டுல்கர் என்ற பெயரில் போலி கணக்கு ஒன்று செயல்பட்டு வந்தது.
எம்எஸ்கே பிரசாத்திற்கு கேள்வி
கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ஜூன் பெயரில் செயல்பட்டு வந்த போலி கணக்கில் ரிஷப் பந்த்தை எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்ததை எதிர்த்து டிவீட் செய்யப்பட்டுள்ளது. சஞ்ஜூ சாம்சனை தேர்வு செய்யாதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
போலி கணக்கை நீக்க வேண்டுகோள்
தன்னுடைய மகனின் பெயரில் செயல்பட்டுவரும் இந்த போலி கணக்கு குறித்து தெரிய வந்ததும், சச்சின் டெண்டுல்கர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தார்.
|
விளக்கம் அளித்த சச்சின்
தன்னுடைய மகன் அர்ஜூன் மற்றும் மகள் சாரா டிவிட்டரில் இல்லை என்று தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், அர்ஜூன் பெயரில் ஜூனியர் டெண்டுல்கர் என்ற கணக்கு செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி, அதில் தேவையற்ற பதிவுகள் செய்யப்படுவதாகவும் டிவிட்டர் நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.
போலி கணக்கு நீக்கம்
இதையடுத்து இந்த போலி கணக்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட டிவிட்டர் நிர்வாகம் அர்ஜூன் பெயரில் செயல்பட்டுவந்த ஜூனியர் டெண்டுல்கர் என்ற அந்த போலி கணக்கை உடனடியாக நீக்கியுள்ளது.