நார்ட்ஜே
தென்னாப்பிரிக்க அணி வீரரான ஆண்ட்ரிக் நார்ட்ஜே ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணி இறுதிப்போடி வரை செல்வதற்கு நார்ட்ஜே முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசனில் அவர் 22 விக்கெட்களை எடுத்து அசத்தினார். இவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் தோனிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசியது குறித்து பகிர்ந்துள்ளார்.
தோனி
அப்போது எனக்கு வயது 16 தான் இருக்கும். சிறு வயது என்பதால் யாரை பார்த்தும் எனக்கு பயம் இல்லை. அப்போது தோனிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசினேன். உண்மையை கூற வேண்டும் என்றால் அவருக்கு பேட்டிங் செய்ய தெரியுமா என்று நான் நினைத்தேன். அவர் குறித்து எனக்கு அப்போது சரியாக தெரியவில்லை. சுற்றி நின்றவர்கள் தோனி குறித்து பெருமையாக பேசி வருகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.
எளிமையான குணம்
நான் வீசிய முதல் சில பந்துகளை தோனி அதிரடியாக விளாசினார். ஆனால் அவர் ஒரு இன்ச் கூட நகரவில்லை, நின்ற இடத்தில் இருந்தே விளாசினார். அவர் மிகவும் எளிமையான மனிதர். அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழகினார். அதன் பின்னர் தான் தோனி யாரென்று உணர்ந்தேன்.
சிஎஸ்கே
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி மிக முக்கியமானவர் ஆவார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள தோனி, இந்த சீசனிலும் சிறப்பான முறையில் அணியை வழநடத்தி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.