கேள்வி
கங்குலி ஏற்கனவே, மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேலும், முன்பு ஐபிஎல் நிர்வாக கவுன்சிலில் இருந்தார். இதனால், கங்குலி ஐபிஎல் அணி ஒன்றின் பதவியில் இடம் பெற முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ராஜினாமா
இது குறித்து கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இதில் எந்த முரண்பாட்டு சிக்கலும் இல்லை. ஏற்கனவே, நான் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். மேலும், இந்த பதவியில் (டெல்லி கேபிடல்ஸ் ஆலோசகர்) பதவியில் சேரும் முன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களிடம் இது குறித்து பேசி விட்டேன்" என தெரிவித்தார். எனினும், பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினால் சிக்கல் ஆகலாம் என தெரிகிறது.
கிரிக்கெட் நிர்வாகம்
கங்குலி இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதன் பின் நீண்ட காலம் கிரிக்கெட் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
மற்ற பணிகள்
பிசிசிஐ பதவிகளிலும், மேற்கு வங்காள கிரிக்கெட் அமைப்பின் பதவிகளிலும் இருந்து கிரிக்கெட் தொடர்பான நிர்வாக பணிகளை கவனித்து வந்தார். இடையே வர்ணனை பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக வந்துள்ளார்.
மாறுபட்ட பணி
இது குறித்து கங்குலி பேசுகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளேன். ஆனால், அதில் இருந்து இந்த பணி மாறுபட்டது. களத்தில் ஆடுவதில் இருந்து பின்னே அமர்ந்து ஆலோசனை கூறுவது மாறுபட்டது" என்றார்.
திறமை வாய்ந்த வீரர்கள்
"கடந்த ஆண்டை விட இந்த முறை டெல்லி அணி பலமாக உள்ளது. சில அற்புதமான திறமை வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். இந்த முறை சிறந்த ஐபிஎல் தொடராக அமையும்" என்றார் கங்குலி.
எதிர்பார்ப்பு
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் தற்போது கங்குலி, ரிக்கி பாண்டிங் ஆகியோரின் வழி காட்டுதலில் டெல்லி அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.