2011 உலகக்கோப்பை
2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. அதில் இந்தியா வென்றது. இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக, அந்த நாட்டின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே புகார் கூறி உள்ளார்.
முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
2011 உலகக்கோப்பை நடந்த போது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மஹிந்தானந்த அலுத்கமகே. அவர் அந்த இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். சில குழுக்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றார்.
வீரர்கள் இல்லை
அந்தப் போட்டியில் ஆடிய வீரர்கள் இந்த புகாருக்கு ஆதாரம் கேட்டனர். அப்போது வீரர்கள் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என மஹிந்தானந்த அலுத்கமகே கூறினார். ஆனால், சில அதிகாரிகள் அந்த உலகக்கோப்பை இறுதி தோல்விக்கு பின் கார் கம்பெனிகளை வாங்கியதாக சுட்டிக் காட்டி தன் சந்தேகத்தை கூறி இருந்தார்.
தேர்வுக் குழுவா?
குறிப்பாக, இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் யாருக்கும் தெரியாமல் 4 வீரர்கள் மாற்றப்பட்டதாக கூறி இருந்தார். முன்னாள் அமைச்சர் தேர்வுக் குழுவை சுட்டிக் காட்டுவதாக தெரிய வந்தது. அப்போதைய தேர்வுக் குழுவில் இடம் பெற்று இருந்தவர் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஆன அரவிந்தா டி சில்வா.
அரவிந்தா டி சில்வா பதில்
அரவிந்தா டி சில்வா உலகக்கோப்பை இறுதிப் போட்டி மேட்ச் பிக்ஸிங் புகாரை முற்றிலும் பொய் என குறிப்பிட்டுள்ளார். இந்த பொய்யை ஐசிசி, பிசிசிஐ மற்றும் இலங்கை கிரிக்கெட் போர்டு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சச்சின், இந்திய ரசிகர்கள்
நாங்கள் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடியது போல, சச்சின் தன் காலம் முழுவதும் அந்த வெற்றியை எண்ணி மகிழ்வார். இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படும் போது இது பலரை பாதிக்கும் என்றார் அரவிந்தா டி சில்வா.
பாதிப்பு
இந்த விஷயத்தில் நாங்கள் மட்டும் அல்ல, தேர்வுக் குழு, வீரர்கள், மற்றும் இலங்கை அணி நிர்வாகத்தோடு, உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் இந்த விளையாட்டுக்காக இதை நாம் முடித்து வைக்க வேண்டும் என்று கூறினார் அவர்.
இந்தியா விசாரிக்க வேண்டும்
மேலும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்காகவாவது இந்திய அரசு, மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்ட உலகக்கோப்பையை தான் வென்றோமா? என விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரவிந்தா டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிசிசிஐ பதில் சொல்லுமா?
பிசிசிஐ 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி ம,மேட்ச் பிக்ஸிங் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. அந்தப் போட்டி இந்தியாவில் தான் நடைபெற்றது. மேலும், உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி. பிசிசிஐ விசாரணை நடத்துமா? இந்த புகார் பற்றி பதில் கூறுமா?