மும்பை: கபடி உலகக் கோப்பைப் போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்ட நிருபரிடம், நீங்க இந்தியன்தானே. இந்தியராக இருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று கோபம் காட்டினார் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் கபில்தேவ்.
மும்பையில் இன்று உலக கபடிப் போட்டி குறித்த செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போதுதான் இ்ப்படி கோபமாக பேசினார் கபில் தேவ். அக்டோபர் 7ம் தேதி முதல் அகமதாபாத் நகரில் உலக கபடிப் போட்டி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. கபில் தேவ் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், பாகிஸ்தான் அணி இந்தப் போட்டித் தொடரில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டார். அதைக் கேட்டதும் கோபமடைந்த கபில் தேவ், நீங்க இந்தியர்தானே, இந்தியராக இருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். எந்த நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?
இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் அரசிடம் விட்டு விடுவோம். விளையாட்டு வீரர்கள் விளையாட்டை மட்டுமே பார்க்க வேண்டும். குளத்தில் குதி என்றால் குதிக்கவும் கூட தயாராக இருக்க வேண்டும் என்றார் கபில்.
இந்த நிகழ்ச்சியின்போது இந்திய அணியினரின் சீருடையை கபில்தேவ் வெளியிட்டார். இந்தியா உள்பட 12 அணிகள் இந்த உலகக் கோப்பை கபடித் தொடரில் கலந்து கொள்ளவுள்ளன. இது 3வது உலகக் கோப்பைப் போட்டியாகும். இதற்கு முன்பு 2004 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் முந்தைய உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்றன.