கொழும்புவில் போட்டி
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தவான், டிராவிட்
இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பலவீனமான அணி
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவருமான அர்ஜுனா ரணதுங்கா கூறுகையில், ""இரண்டாம் தர இந்திய அணி, இங்கு வருவது எங்கள் கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். வருமான தேவைகள் காரணமாக இந்திய பி அணியுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய இலங்கை நிர்வாகத்தை நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியா தங்கள் சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி பலவீனமான அணியை இங்கு விளையாட அனுப்பியது. இதற்கு எங்கள் வாரியத்தை தான் குறை கூற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மோசமான சாதனை
ரணதுங்கா கோபப்படுவதிலும் நியாயம் இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உலகக் கோப்பை வென்ற அணி. ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில் உலகின் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய அணி. ஆனால், இன்று? வங்கதேசம் முதல் அனைத்து அணிகளிடமும் வரிசையாக அடி வாங்குகிறது. தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை, அங்கு டி20 தொடரை இழந்தது. அதேபோல், இப்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம், ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சாதனையை இலங்கை படைத்தது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 428 போட்டிகளில் தோற்றிருக்கிறது. உலகின் வேறு எந்த அணிகளையும் விட, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்ற அணி எனும் மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது என்பதையும் ரணதுங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும்.