போலீசில் புகார்
கணவர் முகமது ஷமியும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவும் தம்மை துன்புறுத்துவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் ஜகான் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச்சில் கொல்கத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது சகோதரன் ஹசித் அகமது மீது புகார் அளித்திருந்தார்.
ஆஜராக உத்தரவு
அந்த புகார் தொடர்பான வழக்கு கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. நீதிபதி பலமுறை உத்தரவிட்டும் இருவரும் ஆஜராகாமல் இருந்தனர்.
15 நாட்கள்
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் ஷமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளையுடன் முடிகிறது
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நாளையுடன் முடிகிறது.
சாதனை
இந்த டெஸ்டில் முக்கிய சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஹீம் கார்ன்வாலை அவுட் செய்ததன்மூலம் 42வது டெஸ்ட் போட்டியில் தனது 150வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த 3வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பட்டியலில் யார்? யார்?
பட்டியலில் அவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் (39 போட்டிகள்), ஜவகல் ஸ்ரீநாத் (40 போட்டிகள்) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். கபில்தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், ஜவகல் ஸ்ரீநாத் 67 டெஸ்ட்களில் 236 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அரெஸ்ட் உறுதி
இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஷமி இந்தியா புறப்பட்டு வரலாம். அவரை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி விட்டதாகவும் கூறப் படுகிறது. எது எப்படி இருப்பினும், இந்த முறை அவர் கைது உறுதி என்று போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.