டெல்லி கிரிக்கெட் தலைவர்
அருண் ஜேட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்தார். அவரது காலத்தில் தான் டெல்லி மாநில கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்தது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை தரமாக சீரமைத்தார்.
வளர்ச்சியில் பெரும் பங்கு
டெல்லி மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத நிலை இருந்த போது, அதை மாற்றி டெல்லி வீரர்கள் இந்திய அணியில் ஆட வழிவகை செய்தார். அவரது காலத்தில் தான் சிறந்த வீரர்களான வீரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர், நெஹ்ரா உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர்.
|
ஆகாஷ் சோப்ரா
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் அருண் ஜேட்லி கிரிக்கெட் விரும்பி. எப்போதும் உதவி செய்பவர். அண்டர் 19இல் ஆடும் சிறுவர்களின் பெயர்களை கூட ஞாபகம் வைத்து சொல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
ஷிகர் தவான்
டெல்லி மாநிலத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பிடித்த ஷிகர் தவான், தன் ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்தார்.
ஹர்ஷா போக்லே
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தன் இரங்கல் செய்தியில், "அருண் ஜேட்லி மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். அவர் அணிந்த பல தலைப்பாகைகளில் கிரிக்கெட் விரும்பி என்பதும் ஒன்று. மிகவும் சீக்கிரமாக 66 வயதில் சென்று விட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
|
மிதுன் மன்ஹாஸ்
டெல்லி மாநில முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் கூறுகையில், அருண் ஜேட்லி தொலைநோக்குப் பார்வை கொண்டவர். டெல்லி வீரர்களுக்கு என நேரம் ஒதுக்குவார். அவருடனான அழகான நினைவுகள் என்னுடன் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வீரேந்தர் சேவாக்
டெல்லியில் இருந்து வந்து இந்திய அணியில் கலக்கிய சேவாக் கூறுகையில், அருண் ஜேட்லி அவர்கள் மறைந்தது வலியை கொடுத்துள்ளது. பெரும் அரசியல் வாழ்க்கையை தாண்டி டெல்லி வீரர்கள் பலர் இந்திய அணிக்கு ஆடியதில் பெரும் பங்கு வகித்தார். முன்பு ஒரு சமயம், டெல்லி வீரர்கள் உயரிய இடத்தில் வாய்ப்பு பெற முடியாத நிலை இருந்தது என்றார்.
|
சேவாக் இரங்கல்
மேலும், டெல்லி கிரிக்கெட் அமைப்பில், அவரது தலைமையின் கீழ் நான் உட்பட, பலரும் வாய்ப்பு பெற்று இந்திய அணிக்காக ஆடினோம். அவர் வீரர்களின் தேவை என்ன என்பதை கேட்பார். பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். தனிப்பட்ட முறையில் அவருடன் நல்ல அழகான உறவில் இருந்தேன். அவரது குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள் என தெரிவித்துள்ளார் சேவாக்.
|
கௌதம் கம்பீர்
தந்தை உங்களுக்கு பேச கற்றுத் தருவார். ஆனால், ஒரு தந்தையை போன்றவர் உங்களுக்கு உரையாட கற்றுத் தருவார். தந்தை நடக்கக் கற்றுத் தருவார். தந்தையை போன்றவர் உங்களுக்கு வீறுநடை போட கற்றுத் தருவார். தந்தை உங்களுக்கு பெயர் கொடுப்பார். தந்தையை போன்றவர் உங்களுக்கு அடையாளம் கொடுப்பார். என்னில் ஒரு பகுதி என் தந்தையை போன்ற அருண் ஜேட்லி அவர்களுடன் சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார் கௌதம் கம்பீர்.