கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல்லின் 6வது போட்டியாக நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 69 பந்துகளில் அடித்த 132 ரன்களே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கே.எல். ராகுலின் அதிரடி ஆட்டம்
மேலும் அணியின் பௌலர்கள் ரவி பிஸ்னோய், முருகன் அஸ்வின் உள்ளிட்டவர்களும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றியை சிறப்பாக முடித்து கொடுத்தனர். முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி தனது அணியின் முதல் வெற்றிக்கு வழிகோலினார்.
அணியின் கூட்டு முயற்சி
இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணம் அணியின் கூட்டு முயற்சியே என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கேப்டனாக எப்போதும் அணியை முன்னால் இருந்து வழிநடத்தவே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற நேரங்களில் கிரிக்கெட் வீரர்
டாஸ் போடும்போது மட்டுமே தான் கேப்டனாக உணர்வதாகவும் மற்ற நேரங்களில் கேப்டனாக மட்டுமின்றி ஒரு கிரிக்கெட் வீரராகவும் தான் உணர்ந்து செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அணியின் பௌலர் ரவி பிஸ்னோய் மிகவும் திறமை மிக்கவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.