பந்து சேதம், தடை
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டம் போட்டு சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரான் பான்கிராப்ட் ஆகியோர் குறிப்பிட்ட காலம் தடை செய்யப்பட்டனர்.
மூவர் கூட்டணி
அவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளனர். ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்ற அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எப்படி விளையாடப் போகிறார்கள்? என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.
இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல்
அதே சமயம் இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் இவர்கள் மூவரையும் எப்படி கேலி, கிண்டல் செய்து வெறுப்பேற்றலாம் என திட்டமிட்டு செயல்பட்டனர். போட்டி துவங்கும் முன் இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பு பலர் ஆஸ்திரேலியா மீது வெறுப்பை கக்கும் வகையில் கோஷமிட்டனர்.
|
மஞ்சள் உப்புத் தாள்
பான்கிராப்ட் மற்றும் வார்னர் இருவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது அவர்கள் வெளியேறும் போது கையில் மஞ்சள் உப்புத்தாள் வைத்துக் கொண்டு அவர்களை கிண்டல் செய்தனர். பான்கிராப்ட் மஞ்சள் உப்புத் தாள் கொண்டு தான் பந்தை சேதப்படுத்த முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதித்த ஸ்டீவ் ஸ்மித்
அதே போல ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங் செய்து வந்த போது இங்கிலாந்து ரசிகர்கள் கோஷமிட்ட படி இருந்தனர். அதை சற்றுக் கண்டு கொள்ளாத ஸ்மித், நிதானமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். 219 பந்துகளில் 144 ரன்கள் குவித்தார் ஸ்மித். அவர் மட்டுமே ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிய ஒரே பேட்ஸ்மேன்.
இது தான் மரியாதையா?
சில நடுநிலையான இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்மித் சதம் அடித்த போதும் அவரை கிண்டல் செய்து கொண்டு இருப்பது சரியான விஷயமில்லை. இது எல்லை மீறிய செயல். அவருக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என இணையத்தில் கருத்து கூறி இருந்தனர்.