பெரும் எதிர்பார்ப்பு
2019 ஆஷஸ் தொடரில் எப்போதும் போல ஐந்து போட்டிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாகவும் இந்த தொடர் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் மூவர்
பந்து சேத விவகாரத்திற்குப் பின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரான் பான்கிராப்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்றாக ஆட உள்ளதும் பரபரப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.
ஆஸி. கேப்டனின் நடைமுறை
இந்த நிலையில், முதல் போட்டிக்கு முன் இரு அணிகளும் முட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதற்கு காரணம், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கடைபிடிக்க விரும்பிய ஒரு நடைமுறை. அவர் டெஸ்ட் போட்டிக்கு முன் இரு அணிகளும் கைகுலுக்கிக் கொண்ட பின் போட்டியை துவங்கலாம் என கூறி இருக்கிறார்.
ஏன் இப்படி செய்கிறது ஆஸி.?
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இடையே பந்து சேத விவகாரத்தில் சிக்கி பாதி தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அப்போது புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட டிம் பெய்ன் ஆஸ்திரேலியா மீதான பந்து சேதம் எனும் கறையை நீக்க தென்னாப்பிரிக்காவுடன் கை குலுக்கி நட்புணர்வுடன் போட்டியை துவக்கினார். அது ஆஸ்திரேலியாவின் நடைமுறையாக மாறியது.
முகம் சுளித்த ஜோ ரூட்
ஆனால், இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் போட்டிக்கு முன் முகம் சுளித்ததாக செய்திகள் வெளியானது. பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்-உம் இந்த நடைமுறை தேவையற்றது என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கை குலுக்கவில்லை
முதல் டெஸ்ட்டுக்கு முன் இங்கிலாந்து அணி, என்ன செய்யப் போகிறது என அனைவரும் காத்திருந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுடன் கை குலுக்கவில்லை. அது சிறிய சலசலப்பை உண்டாக்கியது. மேலும், இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் - ஸ்மித் குறித்து போட்டிக்கு முன்பே கூச்சல் போடத் துவங்கினர்.
வெடித்த சர்ச்சை
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஏன் கை குலுக்க மறுத்தார் என்பது சர்ச்சையாக மாறி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெறுப்புணர்வை காட்டுவதாகவே அவரது முடிவு அமைந்துள்ளது என்ற கருத்தும் கூறப்படுகிறது. ஆஷஸ் தொடரின் முதல் போட்டி துவங்கும் முன்பே சர்ச்சைகளும் தொடங்கி உள்ளன.