பந்து சேத விவகாரம்
ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற பந்து சேத விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த அணியின் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், இளம் வீரர் கேமரான் பான்கிராப்ட் என மூவரையும் தடை செய்து, அதில் இருந்து ஆஸ்திரேலிய அணியும், தண்டனைக்கு உள்ளான அந்த மூன்று வீரர்களும் மீண்டு வந்துள்ளனர்.
புதிய கேப்டன்
அந்த சர்ச்சைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக டிம் பெய்ன்-ஐ நியமித்தது. அவர் தலைமையில் ஆஸ்திரேலியா தன்னை புதிய அணியாக காட்டிக் கொண்டு விளையாடி வருகிறது. பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை என்றாலும், நல்ல அணி என்ற பெயரை எடுக்க முயன்று வருகிறது.
ஆஸி. அமைதியாக இருக்குமா?
பந்து சேத சர்ச்சை முதல் மற்ற அணிகளை சீண்டுவதில்லை என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது. ஆஷஸ் தொடரிலும் அந்த அணியால் அப்படி இருக்க முடியுமா? இதைப் பற்றித் தான் பேசி இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.
விசித்திரம்
ஸ்டோக்ஸ் கூறுகையில், "ஆஸ்திரேலியர்கள் உங்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்வது விசித்திரமானது. களத்துக்கு வந்துவிட்டால் இரு அணிகளின் உண்மையான போட்டித் தன்மை வெளியே வந்துவிடும் என்று நினைக்கிறேன்" என்றார்.
ஏதாவது நடக்கும்?
ஆஷஸ் தான் உலகில் விளையாடப்படும் மிகப் பெரிய டெஸ்ட் தொடர். இந்தத் தொடரில் அணிகள் இடையே எப்போதும் ஏதாவது நடக்கும், இந்த முறையும் அதற்கு மாறாக எதுவும் நடக்காது. எல்லோருக்கும் இது தெரியும். குறிப்பாக 22 வீரர்களுக்கு, அதனால் நிச்சயம் ஏதாவது நாடகம் நடைபெறும் என்றார் ஸ்டோக்ஸ்.
முதல் பந்தில் இருந்து..
மேலும், தான் முதல் பந்தில் இருந்தே விழிப்பாக போட்டியில் விளையாடத் துவங்கி விடுவேன் என்றும் கூறினார். ஆஷஸ் தொடரில் முதல் பந்தில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என்பது உண்மை தான்.