இரண்டாவது டெஸ்ட்
ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இரு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்தார். அதனால், ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டான் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 258 ரன்கள் குவித்தது.
ஸ்டீவ் ஸ்மித் காயம்
ஆஸ்திரேலியா அடுத்து பேட்டிங் செய்தது. வழக்கம் போல மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு வர ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அணியை தாங்கிப் பிடித்து அரைசதம் அடித்து ஆடி வந்தார். அவர் 80 ரன்கள் எடுத்து இருந்த போது ஆர்ச்சர் வீசிய அசுர வேக பவுன்சரில் கழுத்துப் பகுதியில் காயம் அடைந்தார்.
மீண்டும் வந்தார்
அதனால் அப்போது பெரும் பரபரப்பு எழுந்தது. நல்ல வேளையாக ஸ்டீவ் ஸ்மித் ஆடுகளத்தை விட்டு தானே எழுந்து நடந்து சென்றார். பின்னர், 40 நிமிடங்கள் அவர் போட்டியில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் பேட்டிங் ஆட வந்த ஸ்மித் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திடீர் நீக்கம்
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதனால், பெரும் பரபரப்பு எழுந்தது. முதற்கட்ட பரிசோதனைகளில் அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அடுத்த நாள் அவர் ஏன் ஆடவில்லை? பெரிய காயமா? அல்லது ஓய்வில் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்தன.
மாற்று வீரர் வந்தார்
அதனால், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்னஸ் லாபுஷாக்னே ஆடினார். இது போல காயத்தால் வெளியேறும் வீரர்களுக்கு மாற்றாக வரும் வீரர்கள் பேட்டிங், பவுலிங் செய்யலாம் என்ற புதிய விதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ஆச்சு?
ஸ்டீவ் ஸ்மித்துக்கு உண்மையில் என்ன ஆனது என தெரியாமல் ஆஸ்திரேலிய ரசிகர்களும், உலகம் முழுதும் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் ரசிகர்களும் கவலையில் உள்ளனர். ஆஸ்திரேலிய கூடாரத்தில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
ஆஷஸ் தொடரில் ஆடுவாரா?
மீதமுள்ள மூன்று ஆஷஸ் போட்டிகளில் ஸ்மித் ஆடுவாரா? என்பது தான் தற்போது ஆஸ்திரேலிய அணியின் பெரிய கவலையாக உள்ளது. இதுவரை ஸ்மித் மட்டுமே இந்த தொடரில் ரன் குவித்துள்ளார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக தங்களை நிரூபிக்கவில்லை.