வெற்றி குவிக்கும் இந்திய அணி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முக்கிய வெற்றிகளை குவித்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் முன்னணி அணியாக வலம் வருகிறது. எனினும், கோலி கேப்டன்சி குறித்து தொடர்ந்து விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.
வீரர்கள் மாற்றம்
இந்திய அணியில் வீரர்கள் போட்டிக்கு போட்டி மாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை விராட் கோலி அணியை மாற்றாமல் அடுத்தடுத்த போட்டிகளில் ஒரே அணியுடன் களமிறங்கினார் என்பதை பார்த்தாலே அதன் தாக்கம் புரிந்து விடும்.
விமர்சனம்
அந்த அளவுக்கு அணியை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதால் இந்தியா நிலையான அணியுடன் ஆடுவது இல்லை என்ற நிலை உருவானது. மேலும், வீரர்கள் தங்கள் இடத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தால் தன்னம்பிக்கையை இழந்து காணப்படுவதாக கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
நெஹ்ரா என்ன சொன்னார்?
இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு பேட்டியில் கேப்டன் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கோலி இன்னும் கேப்டனாக நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அணியில் தொடர்ந்து மாற்றம் செய்ததால் அணி பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
கேப்டன்சி எப்படி?
"ஒரு வீரராக விராட் கோலிக்கு எந்த அங்கீகாரமும் தேவை இல்லை. அவரது கேரியரை பார்த்தாலே அதைப் பற்றி புரிந்து விடும். ஆனால், கேப்டன்சியில் அவர் இன்னும் கற்றுக் கொள்பவர் தான். அவர் கொஞ்சம் தாக்கம் ஏற்படுத்தும் கேப்டன் என்று வேண்டுமானால் கூறுவேன்." என்றார் நெஹ்ரா.
இரண்டு ஆண்டுகளில்..
"வீரர்களை நாம் கொஞ்சம் அழுத்தத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சந்தேகம் இல்லை. சில சமயம் வீரர்கள் செயல்படாமல் இருந்து விடுவார்கள். அவர்களுக்கு நாம் அழுத்தம் அளிக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டது." என்றார் நெஹ்ரா.
ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பீடு
2000மாவது ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை மிரட்டிய ஸ்டீவ் வாஹ் - ரிக்கி பாண்டிங் அணியுடன் இந்திய அணியை ஒப்பிட முடியாது என்றும், அந்த இடத்தை எட்ட நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அப்போதைய ஆஸ்திரேலிய அணி மூன்று உலகக்கோப்பை மற்றும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டிவரை சென்றதையும், 18-19 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டார்.
குழப்பம் ஏற்பட்டு..
இந்திய அணி ஆஸ்திரேலிய அணி அளவுக்கு வர முடியாது என நான் கூறவில்லை. ஆனால், அதற்கு அணியில் முக்கிய வீரர்கள் மாற்றப்படாமல் இருப்பது அவசியம். மேசையில் நிறைய உணவுப் பண்டங்கள் இருப்பதை பார்த்து ஒரு மனிதர் குழப்பம் அடைகிறார். எனவே, குறைந்த பண்டங்கள் இருக்க வேண்டும். அது சிறப்பாக இருப்பதும் அவசியம்" என்றார் நெஹ்ரா.