முதல் டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் பந்துவீச்சு மிகமுக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி அதில் வெற்றியும் கண்டது. இதில் குறிப்பாக மீண்டும் அஸ்வின் முழு வீச்சில் டெஸ்டில் களமிறங்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அஸ்வின், கடந்த சில போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் தான் ஜாம்பவான் தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
அஸ்வினின் சாதனை
சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இந்த போட்டிக்கு முன்புவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்களை எடுத்திருந்தார். இந்த சூழலில் நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (417) முந்தி 3வது இடத்தை பிடிப்பார். இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்பின்னர்களின் வாய்ப்பு
இதே போல சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2வது இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார். அணில் கும்ளே முதலிடத்திலும் ஹர்பஜன் சிங் 2வது இடத்திலும் இருந்து வந்தனர். தற்போது ஹர்பஜனை முந்தி அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
புதிய முறை பவுலிங்
இந்த போட்டியில் அஸ்வினின் சாதனைகளை தாண்டி அவரின் புதுவித முயற்சிகள் அனைவரின் கவனம் பெற்றது. குறிப்பாக நான்ஸ்ட்ரைக்கர் ஸ்டம்பின் நடுவே வரை சென்று பந்துவீசினார். அப்போது நடுவர் நிதின் மேனன் தனக்கு மறைப்பதாக கூறியும், அதற்கு அஸ்வின் வாக்குவாதம் செய்து, தனது செயல் விதிமுறை படி சரிதான் என நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.