இறுதிப் போட்டி
சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கர்நாடகா அணி முதலில் பேட்டிங்செய்து 180 ரன்கள் குவித்தது.
அஸ்வின் 2 விக்கெட்கள்
இந்தப் போட்டியில் அஸ்வின் பந்துவீச்சின் போது முதல் இரண்டு விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து மிரட்டினார். அதுதான் தமிழ்நாடு அணிக்கு முதல் திருப்புமுனையை அளித்தது.
இம்ரான் தாஹிர் ஓட்டம்
அப்போது ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு இருந்த நிலையில் அஸ்வின் இம்ரான் தாஹிர் போல மைதானத்தை சுற்றி ஓடினார். ஆனால், அவரால் ஹாட்ரிக் எடுக்க முடியவில்லை. அஸ்வின் இரண்டு விக்கெட் எடுத்தாலும் அதன் பின் ரன்களை வாரி வழங்கினார்.
அஸ்வின் பேட்டிங்
பின்னர், தமிழ்நாடு அணி வெற்றி பெற 17 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பேட்டிங் செய்ய வந்தார் அஸ்வின். மறுபுறம் விஜய் ஷங்கர் சிறப்பாக ரன் குவித்து ஆடி வந்தார்.
ரன் ஓட மறுப்பு
19வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன் ஓட வாய்ப்பு இருந்தது. ஆனால், அஸ்வின் ஒரு ரன் மட்டுமே ஓடி விட்டு அடுத்த ரன் ஓட மறுத்து விட்டார். கடைசி ஓவரில் தான் நின்று பேட்டிங் செய்ய அவர் முடிவு செய்ததே அதற்கு காரணம்.
|
இரண்டு ஃபோர்
தோனி போல கடைசி ஓவரை சந்திக்க, ரன் ஓட மறுத்த அஸ்வின், கடைசி ஓவரை வீசப் போவது கிருஷ்ணப்பா கௌதம் என்ற ஸ்பின்னர் என்பதை கண்ட பின் ஹெல்மட்டை அவிழ்த்து விட்டார். இதுவும் தோனி ஸ்டைல் தான்.
இரண்டு ஃபோர்
இப்படி பயங்கர பில்டப் செய்து கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பேட்டிங் செய்த அஸ்வின், முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஃபோர் அடித்து கர்நாடகா அணியை மிரள வைத்தார்.
ரஹீம் போல கொண்டாட்டம்
இன்னும் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால்,அப்போதே வெற்றி பெற்றது போல அஸ்வின் கை முஷ்டியை மடக்கி, காற்றில் பன்ச் செய்து கொஞ்சம் ஓவராகவே கொண்டாடினார் அஸ்வின்.
சொதப்பல்கள்
அதன் பின் அஸ்வின், மூன்று மற்றும் நான்காவது பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். 5வது பந்தில் விஜய் ஷங்கர் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. முருகன் பேட்டிங் செய்ய வந்தார்.
|
மரண வேகத்தில் ஓட திட்டம்
அப்போது அஸ்வின் தோனியைப் போல காலில் கட்டி இருக்கும் பேடை கழட்டினார். மரண வேகத்தில் குறைந்தது 2 ரன்கள் ஓடி போட்டியை டை செய்ய முடிவு செய்த அஸ்வின், அதற்கு காலில் கட்டி இருக்கும் பேட் சிரமமாக இருக்கக் கூடாது என்பதற்காக அப்படி செய்தார். ஆனால், கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
|
தமிழ்நாடு தோல்வி
தமிழ்நாடு அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அஸ்வினின் முதிர்ச்சியற்ற கொண்டாட்டம், அதிகப்படியான முன்னெச்சரிக்கை செயல்கள் ஆகியவற்றை கண்ட ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து இணையத்தில் கருத்துக்கள் கூறி வருகின்றனர். வெற்றிக்கு முன்பே கொண்டாடினால், இப்படி தான் தோல்வி அடைய நேரிடும் என கூறி வருகின்றனர்.