பண விவகாரம்
இந்த மாற்றத்தில் எல்லாம் கனிந்து வந்த நிலையில், அஸ்வின் மற்றும் அவர் தற்போது இருக்கும் ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே ஒரு பண விவகாரம் தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. அது தான் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது?
2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார் இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின். அவரது கேப்டன்சி புதுமையாக இருந்தாலும், வெற்றிகள் கிடைக்கவில்லை.
பிளே - ஆஃப் செல்லவில்லை
இரண்டு ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அதை அடுத்து அணியில் மாற்றம் செய்ய முடிவு செய்த அந்த அணி பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனை வெளியேற்றியது.
அஸ்வின் நீக்கம்
அடுத்து கேப்டன் பதவியில் இருந்த அஸ்வினை, மொத்தமாக அணியில் இருந்து நீக்க முடிவு செய்தது. அதை அடுத்து அஸ்வினை வேறு அணிகளுக்கு மாற்றப் போவதாக தகவல் கசிந்தது.
கங்குலி உறுதி
அஸ்வினின் ஏல விலையான 7.6 கோடி கொடுத்து வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் முயற்சி செய்ததாக கூறப்பட்டது. அஸ்வின் நல்ல வீரர். அவர் டெல்லி அணிக்கு ஆடினால் சிறப்பாக இருக்கும் என்கிற ரீதியில் பேட்டிகளில் கூறி இருந்தார் டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி.
டெல்லி போட்ட டீல்
டெல்லி கேபிடல்ஸ் விரைவாக செயல்பட்டு அஸ்வினை அணி மாற்றம் செய்ய, பேசி முடித்து, ஒப்பந்தம் தயார் செய்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் இந்த அணி மாற்றத்தில் புதிய சிக்கல் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் விதிகள்
ஐபிஎல் விதிகளின் படி, ஒரு வீரரை அணி மாற்றம் செய்யும் போது, வாங்கும் அணி அந்த வீரரின் ஏல விலைக்கு குறையாமல் சம்பளம் அளிக்க ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும், அணி மாற்றம் செய்ய விற்கும் அணிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் அந்த வீரர் பாதி அளவு வரை தனக்கு வேண்டும் என கேட்க முடியும்.
சம்பளம் ஓகே
அஸ்வினின் ஏல விலையான 7.6 கோடியை சம்பளமாக கொடுக்க டெல்லி அணி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், கட்டண விஷயத்தில் பங்கு போடுவது குறித்து தான் அஸ்வின் - பஞ்சாப் அணி இடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை என தகவல் கசிந்துள்ளது.
பஞ்சாப் அணி விளக்கம்
ஆனால், இதை பஞ்சாப் அணி மறுத்துள்ளது. அப்படி எந்த சிக்கலும் இல்லை. போர்டு கூடி முடிவு எடுத்த பின் அணி மாற்றம் நடக்கும் என கூறி உள்ளார். அந்த விளக்கத்தின் படி, இந்த ஒப்பந்தம் இறுதியாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என தெரிகிறது.
எந்த பிரச்சனையும் இல்லை
பஞ்சாப் அணியின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், "இந்த அணி மாற்றத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த மாற்றம் நிகழ வேண்டும் என்றால் போர்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது அஸ்வின் இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகளில் ஆடி வருகிறார். எங்கள் போர்டு இன்னும் சந்திக்கவில்லை" என்றார்.