ரஞ்சி தொடரில் தமிழகம்
ரஞ்சி தொடர் வரும் நவம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. இதற்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பாபா இந்திரஜித் கேப்டனாக செயல்படுவார். இவர் தவிர நமக்கு அறிமுகமான வீரர்கள் அபினவ் முகுந்த், விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் தமிழக அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அஸ்வின் ஒருநாள் அணியில் இல்லை
இவர்களில் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடி இருக்கின்றனர். அஸ்வின் முன்பு, ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளோடு டெஸ்ட் போட்டியிலும் ஆடி வந்தார். ஆனால், இப்போது டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவருக்கு ஒருநாள் போட்டிகளில் ஏன் இடம் இல்லை என்பதற்கு செயல்பாடுகள் அல்லது திறமையை அளவீடாக வைத்து யாராலும் பதில் கூற முடியாது. அஸ்வின் தனக்கு கிடைத்த டெஸ்ட் அணி வாய்ப்பில் கூட சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் விரைவாக 300 விக்கெட்கள் வீழ்த்திய சாதனை படைத்தார் அவர்.
முரளி விஜய் நிலை
முரளி விஜய் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தை வைத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து அவர் அதே இங்கிலாந்து மண்ணில் எசக்ஸ் அணிக்காக ஆடி சதம், அரைசதங்கள் என ரன் குவித்தும் அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பண்ட் உள்ளே, தினேஷ் வெளியே
தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பில் சரியாக ரன் குவிக்கவில்லை. ஆனால், ஒருநாள் போட்டியில் ஓரளவு நன்றாகவே செயல்பட்டார். போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ரன் எடுப்பதில் திறன் பெற்று விளங்கினார். ஆசிய கோப்பையில் கூட நன்றாகவே பேட்டிங் செய்தார். எனினும், ரிஷப் பண்ட்டுக்கு இடம் அளிக்க வேண்டி இவரை அணியில் இருந்து நீக்கி விட்டனர்.
முக்கியமற்ற ரஞ்சி தொடர்
இவர்கள் மூவரின் நீக்கத்தை ஆதரிப்பவர்களும் உண்டு. இதில் அரசியல் உள்ளது. தென்னிந்தியர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதில்லை என கூறுபவர்களும் உண்டு. இதில் மோசமான செய்தி என்னவென்றால், சமீப காலமாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் பெரும்பாலும் ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்து தான் இடம் பெற்று வருகிறார்கள். அப்படி என்றால் எதற்கு வீரர்கள் ரஞ்சி தொடரில் ஆட வேண்டும் என்ற கேள்வியும் இருக்கிறது.
அணியில் இடம் கிடைக்காது
இந்திய அணியில் இடம் கிடைக்காத முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரஞ்சி தொடரில் நன்றாக ஆடினாலும், இந்திய அணியில் இடம் கிடைக்காது என்பதே உண்மை. அதே போல, அஸ்வின் இனி ஒருநாள் போட்டிகளில் ஆடுவார் என நாம் எதிர்பார்ப்பதும் நிறைவேறாது.