தடுமாறிய டெல்லி
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் ஓப்பனர்கள் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். முதல் விக்கெட்டுக்கு, 35 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில், ஷிகர் தவான் 20 ரன்களில் 24 ரன்கள் எடுத்து கேட்ச்சாக, ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 1 ரன்னில் சுனில் நரைன் ஓவரில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். பிறகு ஸ்டீவன் ஸ்மித் 39 ரன்கள், ஹெட்மயர் 4, லலித் யாதவ் 0, அக்ஷர் படேல் 0 என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. வெங்கடேஷ் ஐயர் ஓவரில், அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மயர் 4 ரன்களில் கேட்ச்சானார். அதேபோல், அக்ஷர் படேலும் வெங்கடேஷ் ஓவரில் கேட்ச்சானார். இதுவரை இந்த சீசனில், ஒரு பேட்ஸ்மேனாக எதிரணிகளை அச்சுறுத்திய வெங்கடேஷ் ஐயர், இன்று பவுலிங்கிலும் அசத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கொல்கத்தா அணி 15 ஓவர்களுக்குள்ளாகவே டெல்லி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு அந்த அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில், அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சமாதானம் செய்த தினேஷ்
ஏற்கனவே ஷார்ஜாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த சூழலில், இரு அணி வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது களத்தை மேலும் சூடாக்கியது. ஆம்! ஆட்டத்தின் கடைசி ஓவரை டிம் சௌதி வீசினார். பந்தை எதிர்கொண்ட அஷ்வின், டீப் ஸ்கொயர் லெக்கில் தூக்கி அடிக்க, நிதிஷ் ராணா கைகளில் பந்து தஞ்சமடைய 9 ரன்களில் அவுட்டானார் அஷ்வின். ராணா கேட்ச் பிடித்த பிறகு, வெளியேற தயாரான அஷ்வினிடம் கொல்கத்தா Pacer டிம் சௌதி ஏதோ சில வார்த்தைகளை விட, அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே கடுப்பாக வெளியேறினார் அஷ்வின். அப்போது திடீரென உள்ளே என்ட்ரி கொடுத்த கேப்டன் மோர்கனும் சில வார்த்தைகளை விட, வெளியே சென்றுக் கொண்டிருந்த அஷ்வின் மீண்டும் திரும்பி வந்து பதிலுக்கு பதில் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். உடனடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தலையிட்டு, அஷ்வினை தட்டிக் கொடுத்து 'பரவாயில்ல.. விடு, விடு' என்று தமிழில் சொல்லி அனுப்பி வைத்தார்.
அம்பயர்களிடம் ஆவேசம்
இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. ஆனால், 18.6வது ஓவரில், மிஸ் ஃபீல்டு காரணமாக, அஷ்வின் - பண்ட் இணை இரண்டாவது ரன்னை ஓடி எடுத்தது. இந்த ரன் காரணமாகத் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. டெல்லி அணி பேட்டிங் செய்த பிறகு, இந்த மோதல் குறித்து டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் முகமது கைஃப் அம்பயர்களுடன் விவாதித்தது இங்கு கவனிக்கத்தக்கது. அப்போது அங்கும் வந்த அஷ்வின், கைகளை மைதானத்தை நோக்கி நீட்டி, அம்பயர்களிடம் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியுமா
இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் லைவில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சம்பவம் நிச்சயம் நினைவுக்கு வந்திருக்கும். அது, 2007ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பைத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், யுவராஜ் சிங் - ஃபிளிண்டாஃப் இடையே நடந்த மோதல் தான். அப்போட்டியில், யுவராஜிடம் ஃபிளிண்டாஃப் வம்பிழுக்க, பிராட் வீசிய அடுத்த ஓவரில் 6 பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்சருக்கு பறக்கவிட்டதை ரசிகர்கள் எந்நாளும் மறக்கமுடியாது. அந்த போட்டியில் இப்படித்தான், தோனி யுவராஜை எவ்வளவு தான் சமாதானம் செய்து அழைத்துச் சென்றாலும், அவர் திமிறிக் கொண்டு வந்து ஃபிளிண்டாஃப் போட்டுத் தாக்கியது என்றுமே மறக்க முடியாத சம்பவமாகும்.