கொரோனா வைரஸ் தாக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 170க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வருவோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்திய அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டில் உள்ளது
இதுவரை கொரோனா வைரஸ் காட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தாண்டி, இந்திய சமூகத்துக்குள் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் (Community Transmission) அதை கட்டுப்படுத்துவது கடினம் என கூறப்படுகிறது.
மக்கள் உதவி தேவை
இந்த முறையில் கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் பொதுவெளிக்கு அதிகம் செல்லாமலும், கூட்டமாக கூடாமலும், பிறரிடம் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கவும் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அது மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும். அதற்கு மக்கள் உதவி தேவை.
சுய ஒழுக்கம் குறைவு
இது குறித்து பேசிய அஸ்வின், "இந்தியா போன்ற நாட்டில் கொரோனா வியாதி மிக மோசமாக இருக்கும். ஏனெனில், இங்கே சமுதாயத்துக்காக நான் அளிக்கும் சுய ஒழுக்கம் என்பது மிகக் குறைவாக உள்ளது" என்றார். கொரோனா தொற்று உள்ள ஒருவரை மகாராஷ்டிராவில் அருகே வசிப்போர் அவமானப்படுத்தியதை சுட்டிக் காட்டியும் தன் கவலையை வெளிப்படுத்தினார்.
குழப்பமாக உள்ளது
"இங்கே மிகப் பெரிய பீதியும் உள்ளது. அதே சமயம் அலட்சியமும் உள்ளது. இது எனக்கு குழப்பமாக உள்ளது. இந்தியா போன்ற நாட்டில் வைரஸ் உங்களை அண்டாமல் இருக்க சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்" என்று மீண்டும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
வீட்டில் பயிற்சி
விளையாட்டுக்கள் முடங்கி உள்ளது. உடற்பயிற்சி மையங்களும் இந்தியா முழுவதும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அஸ்வின் தன் வீட்டில் உள்ள சிறிய உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து வருவதாகவும், உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் இன்னும் அதிகமாக மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை அடையவில்லை. அதே சமயம், கொரோனா தாக்கமும் இங்கே குறைவாகவே உள்ளது. விரைவில் மக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்கலாம்.