இந்தியாவில் கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸ் சுமார் 600 பேருக்கும் மேல் பாதித்து உள்ளது. அதனால் முன்னெச்சரிகையாக அரசு அடுத்த 21 நாட்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என லாக்டவுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அவசியத்தை அஸ்வின் மக்களுக்கு எச்சரிக்கையாக கூறி உள்ளார்.
மன்கட் சம்பவம்
2019 ஐபிஎல் தொடரில் அஸ்வின் செய்த மன்கட் சம்பவம் யாராலும் மறக்க முடியாதது. அந்த தொடரின் முதல் பெரும் சர்ச்சையாக வெடித்தது அது. அதை வைத்து தான் கொரோனா வைரஸ்-க்கு எதிராக மக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.
அந்த போட்டி
2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் தான் அந்த சம்பவம் நடந்தது. பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், அந்தப் போட்டியில் பந்துவீச்சின் போது, ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் தான் பந்து வீசும் போது, கிரீஸை விட்டு வெளியே செல்வதை கவனித்தார்.
விதிமுறை என்ன?
எதிர்முனை பேட்ஸ்மேன் என்றாலும், பந்துவீச்சாளர் பந்து வீசி முடிக்கும் வரை கிரீஸை விட்டு தாண்டக் கூடாது/ அப்படி தாண்டினால் அவர்களை விதிப்படி பந்து வீசும் முன்பே ரன் அவுட் செய்ய முடியும். ஆனால், பொதுவாக பலரும் எச்சரிக்கை மட்டுமே விடுப்பார்கள்.
அஸ்வின் என்ன செய்தார்?
ஆனால், அந்தப் போட்டியில் அஸ்வின் எச்சரிக்கை விடவில்லை. மாறாக, ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு முன்னேறியதை கண்டு மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அஸ்வின் தார்மீக விதிகளை மீறி எச்சரிக்காமல் நடந்து கொண்டதாக சர்ச்சை வெடித்தது.
நினைவூட்டல்
அந்த சம்பவம் நடந்து சரியாக ஓராண்டு ஆகி உள்ள நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள அவர், தேசம் தற்போது லாக்டவுனில் இருக்கும் நிலையில் இது நல்ல நினைவூட்டல் என குறிப்பிட்டுள்ளார்.
|
அவுட் ஆகிடுவீங்க
அதாவது, மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியே வந்து ரன் அவுட் ஆனது போல "அவுட்" ஆகி விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஏப்ரல் 15 வரை இந்த லாக்டவுன் நீடிக்க உள்ளது.