பிஸியான கிரிக்கெட் வீரர்
அஸ்வின் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர். ஒருநாள் மற்றும் டி20 அணியில் கடந்த சில ஆண்டுகளாக இடம் பெறாத நிலையிலும், தொடர்ந்து கவுன்டி கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார்.
உலகக்கோப்பையில் துவங்கியது
அஸ்வினின் கிரிக்கெட் வளர்ச்சி 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் துவங்கியது. அதே காலகட்டத்தில் தான் ப்ரீத்தியுடன் அவர் காதல் மற்றும் திருமணம் நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்தார். ஒரே காலகட்டத்தில் இரண்டு தனிப்பட்ட வாழ்க்கை, கிரிக்கெட் இரண்டிலும் சிக்ஸர் அடித்தார் அஸ்வின்.
2011இல் திருமணம்
2011 உலகக்கோப்பை வென்ற கையுடன், சில மாதங்கள் கழித்து நவம்பர் 13, 2011இல் அஸ்வின், ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், இருவரும் ஜோடியாக கிரிக்பஸ்-இன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தனர்.
ப்ரீத்தி சொன்ன காதல் கதை
அந்தப் பேட்டியில் ப்ரீத்தி தங்கள் காதல் கதையை கூறினார். பலரும் நினைத்திருப்பது போல இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலிக்கவில்லை என்றும், திருமணம் செய்த போது கூட நண்பர்கள் பலர் நீங்கள் பள்ளியில் இருந்தே காதலித்தீர்கள் தானே என தவறாக புரிந்து கொண்டு கேட்கிறார்கள் என்றும் கூறினார்.
மீண்டும் சந்திப்பு
பள்ளி காலத்தில் சந்தித்து இருந்தாலும், அதன் பின் பெரியவர்கள் ஆன பின் தான் சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது அஸ்வின் கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருந்தாகவும், உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதனால் டேட்டிங் செல்லவெல்லாம் தங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என கூறி உள்ளார்.
மைதானத்தில் மனம் திறந்த அஸ்வின்
பின்னர் காதலை சொல்லும் முன் அஸ்வின், ப்ரீத்தியிடம், அவருடன் காலம் முழுவதும் வாழ விரும்புவதாக கூறி இருக்கிறார். தான் சிறு வயதில் அதிகம் கிரிக்கெட் ஆடிய கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானத்துக்கும் அழைத்து சென்று பேசியதாகவும் கூறினார் ப்ரீத்தி.
தீவிரமான காதல்
சிலரைப் போல தாங்கள் குழந்தைப் பருவ காதலர்கள் அல்ல. எனவே, அதில் நாடகத்தனமாக ஏதும் இல்லை. தீவிரமான காதலாகவே இருந்ததாக ப்ரீத்தி கூறி உள்ளார். எனினும், இருவரும் ட்விட்டரில் குழந்தைத்தனமாக சண்டை போட்டுக் கொள்வது ஏற்கனவே பிரபலம்.
காலை வாரி விடுவார்
ஆம், அஸ்வின் எப்போதுமே ட்விட்டரில் பிஸியாக இருப்பார். சில சமயம் ப்ரீத்தி அவருக்கு அனுப்பும் பதில்கள் வேடிக்கையான ஊடலாக இருக்கும். சில சமயம் அவரை மாட்டியும் விட்டு விடுவார். வீட்டுக்கே வராமல் கிரிக்கெட் ஆடுவதை செமயாக கிண்டல் அடிப்பார்.
அதுக்கு மட்டும் வரமாட்டார்
அந்த வகையில் ஒரு விஷயத்தை இந்த பேட்டியிலும் போட்டு உடைத்துள்ளார் ப்ரீத்தி. கிரிக்கெட் விளையாட 1000 ஃபிளைட் பிடித்து, 20,000 முறை பயணம் செய்ய பையை எடுத்து வைத்து, பிரித்து வைத்து, பயணம் செய்யும் அஸ்வின், தன்னுடனும், குழந்தைகளுடனும் அடுத்த நாள் வெளியே ட்ரிப் போக மட்டும் பையை எடுத்து வைக்க மாட்டாராம். அஸ்வின் செய்யும் அலும்பை வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் ப்ரீத்தி.