திணறிய வங்கதேசம்
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ரன் குவிக்க திணறியது. தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. 33.2 ஓவர்களில் 101 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இருந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹிதி ஹாசன், மஷ்ரபே மொர்டாசா 66 ரன்கள் குவித்து அணியின் ரன்களை ஓரளவு உயர்த்தினர். மெஹிதி ஹாசன் 42 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுக்க, அந்த அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணி தான் ஆடிய 49.1 ஓவர்களில் 190 பந்துகளில் எந்த ரன்னும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டி போல தான் ஆடியது வங்கதேசம்.
மிரட்டிய ஜடேஜா
நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் அணியில் இடம் பிடித்த ஜடேஜா தன் 10 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். தன் அனுபவத்தை காட்டிய அவர், இந்த ஒருநாள் போட்டியில் தன் நான்காவது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
சிறந்த பந்துவீச்சு
இந்தியா இன்று சிறப்பாக பந்து வீசியது. மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற கூட்டணியோடு களமிறங்கிய இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் 3, பும்ரா 3, ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். சாஹல், குல்தீப் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனினும், கட்டுக்கோப்பாக பந்து வீசினர்.
இந்திய அணியின் பேட்டிங்
174 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்தத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித், தவான் நல்ல துவக்கம் அளித்தனர். 40 ரன்கள் அடித்த தவான், ஷகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா நிதான ஆட்டம் ஆடினார். சரியாக சிக்ஸ் அடித்து அரைசதத்தை கடந்தார் ரோஹித். ராயுடு 13, தோனி 33 ரன்களில் வெளியேற, இறுதியில் கேப்டன் ரோஹித் சர்மா 83 ரன்கள் எடுத்தும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
வரும் செப்டம்பர் 23 அன்று பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது இந்தியா.