இஸ்லாமாபாத்: ஆசியாக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வெல்லும் என்று பெட் வைத்து அதில் தோல்வி அடைந்ததால் வேதனை அடைந்த பாகிஸ்தான் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தனது ஒரு மாத சம்பளத்தை இவர் பெட் வைத்துள்ளார். அந்த வேதனையும் சேரவே இவர் தற்கொலை முடிவை நாடி விட்டார்.
தற்கொலை செய்து கொண்ட அந்த நபரின் பெயர் முகம்மது ஷபீக். இவர் பாகிஸதானின் பஞ்சாப் மாநில நீர்ப்பாசனத்துறையில் ஜூனியர் கிளர்க் ஆக பணியாற்றி வந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் இந்தியாவிடம், பாகிஸ்தான் தோற்றது முதலே சோகமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வங்கதேசத்துடன் நடந்த போட்டியில் கண்டிப்பாக பாகிஸ்தான் வெல்லும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கூறி வந்தார். இதற்காக சிலரிடம் தனது ஒரு மாத சம்பளத்தையும் அவர் பெட் வைத்தார்.
ஆனால் வங்கதேசத்திடம், பாகிஸ்தான் தோற்றுப் போனது. இது ஷபீக்கை நிலைகுலையவைத்து விட்டது. இந்த நிலையில் நேற்று அவர் தனது அலுவலகத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஷபீக் மாதம் ரூ. 30,000 சம்பளம் வாங்கி வந்தார். சம்பளமும் போனதோடு, பாகிஸ்தான் தோற்றதும் அவரை வேதனைக்குள்ளாக்கி விட்டதாம்.