துபாய்: ஆசிய கோப்பை போட்டிகளின் முக்கியமான ஆட்டத்தில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி இன்று துபாயில் நடைபெறவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டிகளில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 6 முறையும் பாகிஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி குறித்த ஒரு அலசல் இதோ..இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. தொடர்ச்சியான வேலைப்பளு காரணமாக கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது இந்திய அணிக்கு சற்று பின்னடைவே ஆகும். இந்திய அணியின் தொடக்க பேட்டிங் ரோஹித் சர்மா,தவான், ராகுல் மற்றும் ராயுடு ஆகியோரை நம்பியுள்ளது. தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் தருவது அவசியம். ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியில் சதம் அடித்த அடித்த தவான் மற்றும் அரைசதம் அடித்த ராயுடு ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தோனி தனது பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். கடந்த போட்டியில் பங்குபெறாத பும்ரா,பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கெதிரான அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார்,பும்ரா மற்றும் சஹால்/குல்தீப் ஆகியோரை நம்பியுள்ளது. பாண்டியா மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ஆவர். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அவர்கள் மிகவும் வலிமையான அணியாகவே உள்ளது. மேலும் துபாயில் விளையாடுவது அவர்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது போல. பாகிஸ்தான் அணி பேட்டிங் ,பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் வலுவான நிலையில் உள்ளது. விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணியை வீழ்த்துவது சுலபம் என்று பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சை சமாளித்து விளையாடுவது இந்திய அணிக்கு சற்றே சவாலான விஷயம் ஆகும். பாக்கர் ஜமான், பாபர் ஆசாம்,இமாம் உல் ஹக் ஆகியோர் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். துபாய் ஆடுகளம் ஸ்லோ ஆன ஆடுகளம் என்பதால் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறமுடியும். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.