ஆசிய கோப்பை போட்டி
கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. உலக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது இதுவே முதல் முறையாகும். எனவே ஆசிய கோப்பையில் அவர்களை பழி வாங்க இந்திய அணி தீவிர முணைப்பு காட்டி வருகிறது.
பாகிஸ்தானுக்கு பின்னடைவு
இந்நிலையில் பாகிஸ்தானை எதிர்கொள்வதில் இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான சாஹீன் அஃப்ரிடி, இந்தியாவுடனான போட்டியில் விளையாடமட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மூட்டுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓய்வு தரப்படவுள்ளதாக தெரிகிறது.
ஏன் இந்தியாவுக்கு நல்லது?
கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சாஹீர் அஃப்ரிடி தான். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரின் விக்கெட்களை கைப்பற்றினார். மேலும் அவரை சமாளிக்க முடியாமல் ரன்களும் குறைந்தன. பவர் ப்ளே ஓவர்களில் மிகச்சிறந்த வீரராக வலம் வருகிறார். எனவே தற்போது அவர் இல்லாதது இந்தியாவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு நற்செய்தி
பாகிஸ்தான் அணி அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் சாஹீன் அஃப்ரிடி விளையாடவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த அணியில் மற்றொரு ஸ்டார் பவுலரான ஹசன் அலியும் சேர்க்கப்படாதது இந்தியாவுக்கு மற்றொரு நல்ல விஷயமாகும்.