மூன்று ஆப்ஷன்
இந்த நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்களை எங்கு நடத்துவது என்பதை தீர்மானிப்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இந்தியாவில் மீண்டும் இங்கு ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியும் அதை உறுதிப்படுத்திவிட்டார். அதேசமயம், இலங்கை, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று இடங்களில் ஐபிஎல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் மீதமுள்ள போட்டிகளை நடத்த அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்பான்சர்ஸ் ஹேப்பி
இந்தியாவின் கால நேரமும், இலங்கையின் கால நேரமும் GMT+5:30 hours படி ஒன்று. இதன் மூலம், இந்தியாவில் போட்டிகளை நடத்திய அதே நேரத்திற்கே இலங்கையிலும் நடத்தலாம். இந்தியாவில் டிவியில் அதை பார்ப்பவர்களும், தங்களது வழக்கமான கால நேரத்தில் பார்க்கலாம். இங்கிலாந்தில் போட்டிகள் நடத்தப்பட்டால், இரவு 7:30 மணிக்கு அங்கு போட்டி தொடங்குகிறது என்றால், இந்திய நேரப்படி நாம் மதியம் 3:00 மணிக்கு போட்டியை பார்க்க நேரிடும். ஸோ, இலங்கையில் தொடரை நடத்துவதன் மூலம் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் 2021 ஸ்பான்சர்கள் இந்திய தொலைக்காட்சியில் 'பிரைம் டைம் ஸ்லாட்டை' அதிகம் பயன்படுத்த முடியும் என்ற பல கணக்கீட்டுகளின் அடிப்படையில் இலங்கையை பெஸ்ட் சாய்ஸாக பிசிசிஐ கருதியதாக கூறப்பட்டது.
எகிறும் வைரஸ்
ஆனால், இலங்கையின் சமீபத்திய அறிவிப்பு அனைத்துக்கும் தடை போட்டுவிட்டது. ஆம், இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, ஜூன் அல்லது ஜுலையில் நடைபெறுவதாய் இருந்த ஆசிய கோப்பை தொடரை ரத்து செய்வதாக இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில், நேற்று (மே.19) மட்டும் ஒரேநாளில் 3,623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை பரப்பளவை பொறுத்தவரை, இந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது மிக மிக அதிகம். இந்த இக்கட்டான சூழலில் தான் ஆசிய கோப்பைத் தொடர் ரத்து செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.
இரண்டு ஆப்ஷன் மட்டுமே
அதன்பிறகு, அவர் சொல்லியுள்ள காரணம் தான் மிக முக்கியமானது. அதாவது, கொரோனா தொற்று பரவல் குறைந்து நிலைமை சகஜ நிலைமைக்கு திரும்பினால் கூட, 2023ல் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை, ஆசிய கோப்பை தொடரை நடத்த வாய்ப்பில்லை. ஏனெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து நாடுகளுக்கான ஷெட்யூல் நிரம்பி வழிகின்றன என்று கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், இந்தாண்டுக்கான மீதமுள்ள 31 போட்டிகளுக்கு, மீண்டும் சர்வதேச வீரர்களை ஒன்றுதிரட்டி விளையாடுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அப்படியே அது சாத்தியப்பட்டாலும், இலங்கையில் தற்போது எகிறும் வைரஸ் பரவலை கணக்கிட்டுப் பார்த்தால், செப்டம்பர், அக்டோபர் வரை அங்கு ஐபிஎல் நடத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஸோ, பிசிசிஐ-க்கு மீதமிருக்கும் ஆப்ஷன் அமீரகமும், இங்கிலாந்தும் தான்.