பாகிஸ்தானுக்கு எதிராக பரிதாபம்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேகரித்து பரிதாபமாக காட்சியளித்தார் யுவராஜ்சிங். அன்றைய தினம் பிட்ச் மிக மோசமாக இருந்ததாக காரணம் கூறப்பட்டாலும், மறுமுனையில் கோஹ்லி எளிதாக 49 ரன்கள் எடுத்ததை மறுக்க முடியாது.
கிரிக்கெட் வாழ்க்கை
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பல பந்துகள், யுவராஜ்சிங்கின் பேட்டில் படாமல் போக்கு காட்டின. யுவராஜ்சிங் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்று கூறுமளவுக்கு அவரது பேட்டிங் இருந்தது.
பந்துதான் யுவராஜை அடித்தது
கடைசிவரை மறுமுனையில் நின்று கோஹ்லி ஸ்கோர் அடிக்க உதவினார் யுவராஜ் என்றபோதிலும், யுவராஜின் கட்டுப்பாடின்றிதான் அது நடந்தது என்பதை கிரிக்கெட் விமர்சகர்கள் மறுக்கவில்லை. அதாவது, பந்தை யுவராஜ் அடிக்கவில்லை.. பந்துதான் அவரை அடித்துவிட்டு சென்றது.
பழைய பன்னீர்செல்வம்
இந்நிலையில், நேற்றைய இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் பழைய பன்னீர்செல்வமாக காட்சியளித்தார் யுவராஜ்சிங். முந்தைய போட்டிகளில் இருந்து வேறுபட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, பழைய ஆக்ரோஷத்தோடு ஆடினார் யுவராஜ்சிங். பேட்டை அதிமாக உயர்த்தி, பவர்ஃபுல்லாக பந்துகளை விரட்டும் பழைய ஷாட்டுகள் நேற்றைய போட்டியில் அரங்கேறின.
1 பந்துக்கு 2 ரன்கள்
சேகரிக்கப்பட வேண்டிய ரன்களை விட, பந்துகள் எண்ணிக்கை, குறைவாக இருந்த காலகட்டத்தில் களம்புகுந்த யுவராஜ்சிங், அணியின் தேவைக்கு ஏற்ப அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 35 ரன்கள் குவித்து பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் யுவராஜ்சிங். அவரின், ஸ்டிரைக் ரேட் ஏறத்தாழ 200.
ஸ்டைல் சேஞ்ச்
முந்தைய சில போட்டிகளில் யுவராஜ்சிங் பேட்டிங் செய்த ஸ்டைலில் இருந்து நேற்றைய போட்டி முற்றிலும் மாறுபட்டிருந்தது. யுவராஜ்சிங்கின் ட்ரேட் மார்க், சிக்சர்கள் நேற்றைய போட்டியில் பறந்தன. பந்தை சரியான வேகத்தில் யவராஜ் அடித்தார். பவுன்சர் பந்துகள் மட்டுமே அவரை சற்று அச்சுறுத்தின.
டோணி ஹேப்பி
யுவராஜ்சிங் ஃபார்முக்கு வந்தது யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, கேப்டன் டோணிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை டி20 போட்டித்தொடர் நெருங்கும் நிலையில், யுவராஜ்சிங்கை அணியில் வைத்திருப்பதா, வெளியேற்றுவதா என்ற குழப்பத்தில் இருந்த டோணிக்கு இப்போதுதான் குழப்பம் தீர்ந்துள்ளது.
இந்தியா சூப்பரப்பு
நேற்றைய போட்டிக்கு பிறகு டோணி கூறுகையில், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதுதான் கிரிக்கெட்டின் வெற்றிக்கு அவசியம். கடந்த 9-10 டி20 போட்டிகளை எடுத்து பார்த்தால், இந்தியா சிறப்பாக ஆடியுள்ளது தெரியவரும்.
மகிழ்ச்சி
இலங்கைக்கு எதிரான போட்டியில் யுவராஜ்சிங்கின் ஆட்டம் முக்கியமானது. இந்த போட்டிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அணிக்கும், யுவராஜ்சிங் ஃபார்முக்கு வந்தது நலன் தரும். ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் பொறுப்போடு ஆடுவது மகிழ்ச்சிக்குறியது. இவ்வாறு டோணி தெரிவித்தார்.