கடைசி போட்டி
வரும் 26ம் தேதி அன்று நடைபெறும், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தான், மலிங்கா விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும். அவரது ஓய்வு குறித்த தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை அணி தடுமாற்றம்
இலங்கை அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் இல்லாமலும், சரியான பவுலர்கள் அமையாமல் தடுமாறி வருகிறது. அதன் காரணமாக ஓய்வு பெறும் எண்ணத்துடன் இருந்த மலிங்கா, வேறுவழியின்றி உலக கோப்பை தொடரில் விளையாடினார்.
பவுலர்
அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா 7 போட்டிகளில்13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவர் வீசி 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். உலக கோப்பையில் சிறந்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் 16வது இடம் பிடித்தார்.
சாதனைகள்
30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளும், 225 ஒருநாள் போட்டிகளில் 335 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 73 டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும், ஒருநாள் போட்டிகளில் 8 முறையும், டி20, ஐபிஎல் போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பயிற்சியாளராகிறார்?
ஓய்வுக்கு பின் மலிங்கா பயிற்சியாளர் பணியை தொடங்க உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா, அந்த அணியின் ஆஸ்தான வீரராக திகழ்கிறார். இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.