கடும் சோதனை
கிரிக்கெட் வீரர் ராகுல் கடந்த இரு ஆண்டுகளில் கிரிக்கெட் வாழ்வில் கடும் சோதனைகளையும், முன்னேற்றத்தையும் மாற்றி, மாற்றி பார்த்து விட்டார். 2018ஆம் ஆண்டு முழுவதும் பார்ம் அவுட் வீரராக வலம் வந்தார். அதை மீறியும் அவருக்கு அணியில் இடம் கொடுத்து வந்ததால், அதற்கும் சேர்த்து விமர்சிக்கப்பட்டார்.
தடை செய்யப்பட்டார்
2019 துவக்கத்தில் "காபி வித் கரன்" நிகழ்ச்சியில் சக வீரர் ஹர்திக் பண்டியா பெண்கள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்ட போது, அவருடன் பேட்டி அளித்த காரணத்தால் ராகுலுக்கும் தடை விதிக்கப்பட்டது.
அசுர வளர்ச்சி
அந்த தடையில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று, ராகுல் டிராவிட் அறிவுரைகளை பெற்று தன் பார்மை மீட்டார். பின் பேட்டிங்கில் மெருகேறிய அவர், கடந்த சில மாதங்களாக அணியின் முன்னணி வீரராக, துவக்க வீரராக, முதன்மை விக்கெட் கீப்பராக மாறி உள்ளார்.
ஆதியா ஷெட்டியுடன் ராகுல்
இந்த சர்ச்சைகள், தடைகள், வளர்ச்சிக்கு நடுவே அவ்வப்போது ஆதியா ஷெட்டியுடன் காணப்பட்டார் ராகுல். இருவரும் சமூக வலைதளங்களில் தாங்களே புகைப்படம் பதிவிட்டும் வந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் ஆதியா என்பது குறிப்பிடத்தக்கது.
சுனில் ஷெட்டியை கேலி செய்தனர்
இருவரும் சேர்ந்து ஒரு முறை சுனில் ஷெட்டியை கேலி செய்தும் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தனர். அது மிகப் பெரும் வைரல் ஆனது. இன்ஸ்டாகிராமில் சுமார் 10 லட்சம் பேர் அந்த பதிவை லைக் செய்தனர். அது குறித்து சுனில் ஷெட்டியிடம் கேட்கப்பட்டது.
எனக்கு ஓகே
சுனில் ஷெட்டி தன் மகள் தன் துணையை தேர்வு செய்து கொள்வதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் யாரை காதலித்தாலும் தான் ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறி இருந்தார். ஆனால், இதுவரை ராகுல் - ஆதியா ஷெட்டி காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில், ஏப்ரல் 18 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல். கொரோனா வைரஸ் காரணமாக தனிமையில் இருப்பதால், ராகுலுக்கு, இன்ஸ்டாகிராமில் தன் பிறந்தநாள் வாழ்த்தை கூறினார் ஆதியா ஷெட்டி. அதில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையைக் கூறி இவர் தான் என் காதலன் என அழுத்தமாக கூறி இருந்தார் ஆதியா.
View this post on Instagramhappy birthday, my person 🤍 @rahulkl
A post shared by Athiya Shetty (@athiyashetty) on
என் ஆள்
"என் ஆளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" (Happy Birthday, my person) என குறிப்பிட்டு இருந்தார் ஆதியா ஷெட்டி. அவர் "என் ஆள்" என குறிப்பிட்டது இணையவாசிகள் இடையே வைரலாக பரவி வருகிறது. சுமார் 4 லட்சம் பேர் அந்த பதிவை லைக் செய்துள்ளனர்.
தள்ளிப்போன கேப்டன் வாய்ப்பு
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடைபட்டுள்ளது. ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக முதன் முதலாக செயல்பட இருந்தார் ராகுல். அதுவும் தள்ளிப் போயுள்ளது.