5க்கு இரண்டு டி20யில் வெற்றி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் முதலில் விளையாடிவரும் சர்வதேச டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளனர். முதல் இரண்டு போட்டிகள் ஆக்லாந்தில் நடைபெற்ற நிலையில் 3வது போட்டி ஹாமில்டனில் நாளை நடைபெறவுள்ளது. இதற்கென ஆக்லாந்தில் இருந்து ஹாமில்டனுக்கு இந்திய அணியினர் பயணம் மேற்கொண்டனர். முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வசப்படுத்தியுள்ள நிலையில், இந்த 3வது போட்டியில் வெற்றிபெற நியூசிலாந்து தீவிரம் காட்டி வருகிறது.
உருப்பெற்ற சாஹல் டிவி
இந்தியா -நியூசிலாந்து இடையிலான 3வது சர்வதேச டி20 போட்டியை விளையாட இந்திய அணியினர் சாலைவழியாக ஆக்லாந்திலிருந்து ஹாமில்டன் சென்றனர். அப்போது தங்களுக்கு பிடித்த இசையை கேட்டவாறு அனைவரும் சென்ற நிலையில், இளம்வீரர் சாஹல் மட்டும் தன்னுடைய இருக்கையில் அடங்காமல் அனைத்து வீரர்களையும் தன்னுடைய சாஹல் டிவிக்காக பேட்டி கண்டவாறு துறுதுறுப்பாக காட்சியளித்தார்.
பிடித்தமானவை குறித்து கேள்வி
வளர்ந்துவரும் இளம்வீரர் சாஹல், மைதானத்திலும் முன்னணி வீரர்களை பேட்டி காண்பது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இந்நிலையில் ஹாமில்டன் நோக்கி சென்ற கிரிக்கெட் வீரர்களின் பயணத்தில் தன்னுடைய பெயரில் விளையாட்டாக சாஹல் டிவியை உருவாக்கி, சக வீரர்களுக்கு பிடித்தமான உணவுகள், நியூசிலாந்து பயணம் உள்ளிட்டவை குறித்து அவர் எழுப்பிய கேள்வி, அந்த அவர்களின் பயணத்தை சுவாரஸ்யமாக்கியது.
பயணத்தை என்ஜாய் செய்த பும்ரா
முதலில் தன்னுடைய சாஹல் டிவிக்காக ஜஸ்பிரீத் பும்ராவை பேட்டி கண்ட சாஹல் அவரை கலாய்த்து தள்ளினார். ஆனாலும் பொறுமையாக பதிலளித்த பும்ரா நியூசிலாந்துக்கு தான் முதன்முதலில் பயணம் செய்வதாகவும் இந்த பயணம் தன்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளதாகவும் தெரிவித்தார். அவருடைய உணவு குறித்த சாஹலின் கேள்விக்கு தான் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவேன் என்றும் அவர் கூறினார்.
கே.எல்.ராகுலை கவர்ந்த நியூசிலாந்து
முகமது ஷமி உள்ளிட்டவர்களை வம்பிழுத்த சாஹல், கே.எல். ராகுலையும் விட்டு வைக்கவில்லை. சாஹலின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், பெரிய கட்டடங்கள் இல்லாத நியூசிலாந்தின் இயற்கை அழகு மிகுந்த இடங்கள் தான் இதுவரை சென்ற நாடுகளிலேயே மிகவும் தனித்துவமாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து சாஹலுக்கு பேட்டியளித்த குல்தீப் யாதவ், பயணங்கள் தன்னை மிகவும் கவர்வதாக தெரிவித்தார்.
"தோனியை மிஸ் செய்கிறோம்"
இதைதொடர்ந்து பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற யுஸ்வேந்திர சாஹல், அங்கு கண்ணாடி அருகில் இருந்த இருக்கையை காட்டி, அது தோனி வழக்கமாக அமரும் இருக்கை என்றும், அவரது இருக்கையில் தாங்கள் யாரும் அமர மாட்டோம் என்றும், அவரை அனைவரும் மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டார். சாஹலின் இந்த விடியோவை பிசிசிஐ டிவி பகிர்ந்துள்ளது.
தோனியை மிஸ் செய்யும் ரசிகர்கள்
உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி நாடு திரும்பியதிலிருந்து சர்வதேச போட்டிகளில் இருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி விலகியுள்ளார். சமீபத்தில் வீரர்கள் தேர்வு பட்டியலில் இருந்து இவரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று தோனி விளையாடவுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் இவரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் சாஹலின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.