பில்டப்
ஒரு வீரர் அறிமுகம் ஆகும் முன்பே அவருக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டால் அது நிச்சயம் சந்தேகத்தை உண்டாக்கும். ப்ரித்வி ஷாவுக்கும் அதே போலவே அவர் முதல் டெஸ்டில் அறிமுகம் ஆகும் முன்பே பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது.
சதம்
ஆனால், அவர் முதல் டெஸ்டில் சதம் அடித்து தான் அந்த பாராட்டுக்களுக்கு உரியவன் என காட்டினார். ஆனால், அது அவரது முதல் டெஸ்ட் தொடரில் மட்டுமே. அவரை அடுத்த சச்சின், சேவாக், பிரையன் லாரா என்றெல்லாம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அப்போது புகழ்ந்து தள்ளினார்.
ஊக்க மருந்து சர்ச்சை
அடுத்து அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற போது ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கினார். பின் அவருக்கு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் ஐபிஎல், இந்திய அணியில் இடம் என வாய்ப்புகளை பெற்றார்.
சொதப்பல்
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக பங்கேற்ற போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுத்தாலும் அதற்கு அணி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
தொடர்ந்து வாய்ப்பு
கடந்த முறை நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு கொடுத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.
ஷுப்மன் கில் நிலை
அவரால் அதிகம் பாதிக்கபப்டு இருப்பது இளம் வீரர் ஷுப்மன் கில் தான். துவக்க வீரராக ஆடி வரும் ஷுப்மன் கில் டெஸ்ட் அணியில் இரண்டு முறை வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டு ப்ரித்வி ஷாவிடம் தன் இடத்தை இழந்தார்.
முதல் டெஸ்ட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அதே தான் நடந்தது. இந்தப் போட்டியில் ப்ரித்வி ஷா தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து ஷுப்மன் கில்லுக்கு ஏன் கேப்டன் கோலி இடம் அளிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்கள் விளாசல்
குறிப்பாக ரசிகர்கள் ப்ரித்வி ஷாவை அணியில் தேர்வு செய்த கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியை விளாசி வருகின்றனர். இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் ஏன் ப்ரித்வி ஷாவுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும்?
அரசியல் பின்புலம்
ப்ரித்வி ஷாவின் அரசியல் பின்புலத்தை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். மும்பையின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் ப்ரித்வி ஷாவுக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருகிறார். சிறு வயது முதலே சச்சினின் பார்வையில் அவ்வப்போது ப்ரித்வி ஷா இருந்துள்ளார்.
என்ன நடக்கும்?
அந்த அரசியல் அழுத்தம் ப்ரித்வி ஷாவுக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்க காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். முதல் டெஸ்டில் இரண்டாம் இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தால் ப்ரித்வி ஷா அதில் பெரிய இன்னிங்க்ஸ் ஆட வேண்டும். இல்லையெனில் அணியில் நீடிப்பது கடினமே.