சிட்னி : ஆஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு அறிகுறி இருந்த நிலையில், இன்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் கொரோனா அறிகுறியால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையே நியூசிலாந்து நாட்டில் தங்கள் நாட்டு எல்லையை தாண்டி வரும் மக்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளதால், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது சீனாவில் தொடங்கிய அந்த கொடிய வைரஸ் தற்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. சீனாவில் அதன் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மற்ற நாடுகளில் அதிகரித்துள்ளது.
இத்தாலியில் சுமார் 17,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி உள்ளது. அங்கே மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் உள்ளது. நியூசிலாந்து நாட்டில் இப்போது தான் பரவத் துவங்கி உள்ளது. இதுவரை 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இப்படி போட்டி நடத்துவதால் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்ற எண்ணத்தில் மண்ணை தூவி உள்ளது அங்கே நடந்த சம்பவம்.
முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு நடந்த சோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டி முடிந்த உடன் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. அதனால், அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒருவேளை இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், இந்த தொடரில் பங்கேற்ற அனைவருக்கும் அது பரவி இருக்க வாய்ப்பு உள்ளது.
இப்படி ஒரே தொடரில் இரு வீரர்களுக்கு அறிகுறி ஏற்பட்டு பீதி கிளப்பி உள்ளது. ஒருவேளை பெர்குசனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இருமினால் கூட பயப்பட வேண்டிய நிலையில் தான் வீரர்கள் இருந்தனர்.
இதற்கிடையே, நியூசிலாந்து நாட்டில் கடும் எல்லை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், நியூசிலாந்து வீரர்கள் அதற்கு முன் தங்கள் நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். ஒருநாள் தொடரின் அடுத்த இரு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து வீரர்கள் விரைவில் தங்கள் நாட்டுக்கு திரும்ப உள்ளனர்.
இந்த ஒருநாள் தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து சென்று டி20 தொடரில் பங்கேற்க இருந்தது. அந்த தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காலி மைதானத்தில் கூட கிரிக்கெட் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என்பதே தற்போதைய நிதர்சனம்.