டாண்டன் : ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முஹம்மது ஆமிர் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை திக்கு முக்காட வைத்தார்.
ஆஸ்திரேலியா அணி இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தது. பாகிஸ்தான் அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என கருதப்பட்டது.
ஆனால், ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா கடைசி நேரத்தில் தடுமாறி விக்கெட்களை இழக்க முக்கிய காரணம் முஹம்மது ஆமிர் தான்.
ஆமிர் 5 விக்கெட்கள் எடுத்து உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்களுக்கு மேல் எடுத்த ஏழாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தப் போட்டியில் அவர் எடுத்த 5 விக்கெட்கள் தான் அவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் ஆமிர் பந்துவீச்சில் ரன் எடுக்கத் திணறியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆமீர் பந்துவீச்சில் இரண்டு ஓவர்களில் ரன் அடிக்காமல் மெய்டனாக சமாளித்தனர்.
பின்னர், வார்னர் 107, ஆரோன் பின்ச் 82 ரன்கள் குவித்தனர். ஆமீர் தன் முதல் விக்கெட்டாக ஆரோன் பின்ச்சை காலி செய்தார். அடுத்து ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வரை இழந்தது. எனினும், அந்த அணியின் ரன் ரேட் 6.5க்கு மேல் இருந்ததால், எப்படியும் 350 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தன் விக்கெட் வேட்டையை ஆரம்பித்தார் ஆமிர். மிடில் ஆர்டரில் முக்கிய பேட்ஸ்மேன்களான ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, என வரிசையாக விக்கெட் எடுக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்டம் காணத் துவங்கியது.
49வது ஓவரில் அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டையும் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 350 ரன்களை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், 307 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த கூடுதல் 50 ரன்களை தடுத்து நிறுத்தி பாகிஸ்தான் அணிக்கு இலக்கை சற்றே குறைத்து நிர்ணயிக்க வைத்தார் முஹம்மது ஆமிர். எனினும், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மோசமாகவே இருந்தது. அந்த அணி சேஸிங்கில் 30 ஓவர்களுக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது.