என்ன நடந்தது?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிறைய பீல்டிங் வாய்ப்புகளை கோட்டை விட்டது பாகிஸ்தான். ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடியது இரண்டே இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே. அவர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர். அவர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது தான் பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
நழுவிய கேட்ச்கள்
ஆரோன் பின்ச் 26 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆசிப் அலி நழுவ விட்டார். அவர் பின் 82 ரன்கள் சேர்த்து தான் ஆட்டமிழந்தார். அதே போல வார்னர் இரண்டு முறை ஆட்டமிழக்க இருந்தார். ஆனால், பாகிஸ்தான் செய்த சொதப்பலால், வாய்ப்பு பெற்ற அவர் சதம் அடித்து 107 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் தவறுகள்
இது மட்டுமில்லாமல், மேலும் சில கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ரன்களை கோட்டை விட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். இந்த தவறுகளை சுட்டிக் காட்டித் தான் தன் வீரர்களை எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது.
எச்சரிக்கை
இந்திய அணி மிக வலிமையான அணி என்பதால் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று விஷயங்களிலும் பாகிஸ்தான் அணி வலுவாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என தன் வீரர்களை எச்சரித்துள்ளார் சர்பராஸ் அஹ்மது.
வீழ்த்தியதே இல்லை
இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஜூன் 16 அன்று நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தியதே இல்லை.
வெற்றி பெற்றே தீருவது
1992 முதல் இரு அணிகளும் ஆறு முறை உலகக்கோப்பை தொடரில் சந்தித்துள்ளன. அந்த ஆறு முறையும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதை இந்த உலகக்கோப்பை தொடரில் மாற்றியே தீருவது என்ற முடிவில் உள்ளது பாகிஸ்தான் அணி.
நியூசிலாந்து போட்டி
இந்திய அணி இன்று, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க உள்ளது. அதன் பின்பு தான் இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகும்.