மெல்பர்ன் : தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது.
4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பணம் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணம் முழுவதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்ச்சைகள் மேல் சர்ச்சைகளாக வெடித்து வருகின்றன. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் ஆஸ்திரேலியா சிக்கி இருந்தது.
இந்நிலையில் புதிய சர்ச்சையாக ஆஸ்திரேலிய வீரர் பென்கிராப்ட் தன்னுடைய உள்ளாடையில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்து அவ்வபோது அதனை எடுத்து பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து துணை கேப்டன் டேவிட் வார்னருக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது.
இதனிடையே பந்தை சேதப்படுத்தியது உண்மை தான் என்று ஸ்மித்தும், பென்கிராப்ட்டும் பகிரங்கமாக ஒப்புகொண்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகுந்த அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து ஸ்மித்தின் கேப்டன் பதவியும், டேவிட் வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இதோடு தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல உடனடியாக நாடு திரும்புமாறு 3 பேருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பந்தை சேதப்படுத்தியதற்கு துணையாக இருந்த கேப்டன் ஸ்மித்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் 100 சதவீத அபராதமும் விதித்துள்ளது. பென்கிராப்ட்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் ஓராண்டு கிரிக்கெட் போட்டிகள் விளையாட தடை விதித்துள்ளது. புது முக வீரர் பென்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.