பிசிசிஐ உறுதி
குறிப்பாக, இங்கிலாந்து, வங்கதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில், தங்கள் அணி வீரர்களை கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என்ற முடிவில் கறாராக உள்ளது. இத்தொடர் 3,000 - 4,000 கோடி பிஸ்னஸ் என்பதால், வெளிநாட்டு வீரர்கள் இன்றி போட்டிகள் நடந்தால், தொடரில் சுவாரஸ்யம் இருக்காது என்று பிசிசிஐ எண்ணுகிறது. இதனால், எப்பாடுபட்டாவது வெளிநாட்டு வீரர்களை கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது.
குறையும் ஆர்வம்
ஏற்கனவே வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்கள், ஐபிஎல்-லில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டது. இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பெரிதாக எந்த இழப்பும் கிடையாது. அதுவே, இங்கிலாந்து அணி ஆடவில்லை என்றால், அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரு இங்கிலாந்து வீரர்களும் அந்த அணியின் இரு கண்கள் எனலாம். இருவருமின்றி அந்த அணி தொடரில் பங்கேற்றால், நிச்சயம் "வியூவர்ஷிப்" குறையும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, அந்த அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும்.
ஒருமித்த கருத்து
அதேசமயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், நியூசிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது ஏறக்குறைய உறுதியானது. இதுகுறித்து கிரிக்கெட்.காமிடம் பேசிய ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், "வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்த ஒருமித்த கருத்துக்கு வர பி.சி.சி.ஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று சமீபத்தில் தெரிவித்தார்.
தொடரும் பேச்சுவார்த்தை
இந்த சூழலில், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ எதிர்பார்த்தது. ஆஸி., வீரர்கள் வரவில்லை எனில், பேட் கம்மின்ஸை 15 கோடிக்கு வாங்கி வைத்திருக்கும், கொல்கத்தா அணியின் அடிநாதமே கலங்கிவிடும். இந்த நிலையில் தான், ஆஸி., வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்த ஒருமித்த கருத்துக்கு வர அந்நாட்டு வாரியத்துடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிரிக்கெட். காம் தளத்துக்கு ஐபிஎல் அணி ஒன்றின் உரிமையாளர் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.
அனுமதிக்க முடிவு
இந்த நிலையில், Cricbuzz தகவலின் படி, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டாய்ஸ், ஜை ரிச்சர்ட்சன் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஏழு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களில் இருந்து விலகியிருந்தனர். உலக டி20க்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் விதமாக இந்த ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. எனவே, அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற பிறகு உடனே டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. எனவே, ஐபிஎல்-லில் விளையாடுவது நிச்சயம் டி20 உலகக் கோப்பை தயாரிப்புக்கு பக்கபலமாக இருக்கும் என்று ஆஸி., வாரியம் நம்புவதால், தங்கள் வீரர்களை ஐபிஎல் 2ம் கட்ட தொடருக்கு அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷாருக் ஹேப்பி
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது குறித்த அப்டேட்டை, அனைத்து ஐபிஎல் ஓனர்களுக்கும் அதிகாரப்பூர்வமின்றி பிசிசிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், அவர்கள் தங்கள் அணி தயாரிப்புகளை இப்போதே மாற்றிக் கொள்ள முடியும் என்பதால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை கேட்டு அதிகம் மகிழ்ச்சி அடைந்தது ஷாருக்கான் தானாம். ஏனெனில், பேட் கம்மின்ஸ் மீது 15 கோடி இன்வெஸ்ட் செய்துள்ள கொல்கத்தா அணிக்கு, அவர் விளையாடவில்லை பெரும் இழப்பாக அமைந்துவிடும். ஆஸி., வீரர்கள் கலந்து கொள்வது உறுதியாகும் பட்சத்தில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.