லார்ட்ஸ்: உலக கோப்பை வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 5வது முறையாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி வார்னர், பின்ச் ஜோடி உலக சாதனை படைத்துள்ளது.
உலக கோப்பை தொடர் 32வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பின்ச் நிதானமாக விளையாடி அணிக்கு நிலையான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
வார்னர் 53 ரன்களுக்கும், பின்ச் 100 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை எடுத்தது.
அணியின் ரன் விகிதம் குறைந்த போதிலும், முதல் விக்கெட்டுக்கு வார்னரும், பின்சும்123 ரன்கள் குவித்தனர். இது ஒரு புதிய உலக சாதனையாகும். அதாவது, உலக கோப்பை வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 5 முறை தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் இந்த ஜோடி சேர்த்திருக்கிறது.
இதற்கு முன்னதாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். வார்னர், ஆரோன் பின்ச் ஜோடிக்கு அடுத்ததாக கிராண்ட் பிளவர், கிறிஸ் தவாரே ஜோடி 1983ம் ஆண்டில் 4 முறை இதே சாதனையை படைத்திருக்கிறது.
அதன்பின்னர், டேவிட் பூன், ஜெப் மார்ஷ் ஜோடி, அமிர் சொகைல், சையது அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன் ஜோடி 4 முறை இதே சாதனையை படைத்திருக்கிறது. வார்னர், பின்ச் ஜோடி உலக சாதனையால் ஆஸி. ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.