ஆஸி, டெஸ்ட் தொடர்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியாக வேண்டும். மறுபுறம், இந்தியாவுடன் மோதிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுப்பதற்காக காத்துள்ளன. இதனால் ரசிகர்களிடையே இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பயிற்சி ஆட்டம் இல்லை
ஆனால் இந்த முக்கியமான தொடருக்காக ஆஸ்திரேலிய அணி ரிஸ்க்கான முடிவை எடுத்துள்ளது. வழக்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்திய ஏ அணியுடன் ஆஸ்திரேலிய அணி பயிற்சி போட்டியில் விளையாடும். ஆனால் இந்த முறை பயிற்சி போட்டியே எதுவும் வேண்டாம் எனக்கூறிவிட்டு, சொந்த அணிக்குள்ளேயே பயிற்சிகளை செய்துக்கொள்வதாக கூறியுள்ளது.
என்ன காரணம்
இந்நிலையில் இதற்கான காரணம் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசியிருந்த உஸ்மான் கவாஜா, பயிற்சி ஆட்டங்களின் போது காப்பாவில் உள்ளது போல நிறைய புற்களுடன் பிட்ச்-ல் விளையாட வைக்கின்றனர். ஆனால் நிஜமான போட்டிக்கு செல்கையில் புற்களே இல்லாமல் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்- தயார் செய்யப்படுகிறது. இப்படி இருப்பதால் பயிற்சி போட்டியில் ஆடுவதில் என்ன பயன்? எனக் கேட்டிருந்தார்.
ஆதரவு தந்த ஹீலி
இதற்கு முன்னாள் வீரர் இயான் ஹீலி ஆதரவுக்குரல் தந்துள்ளார். அதில், இந்தியாவை இனியும் நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. பயிற்சியில் ஒரு பிட்ச்-ம், போட்டியின் போது ஒரு பிட்ச்-ம் வைப்பதால் ஏமாற்றப்படுகிறோம். இதனால் இரு நாட்டு வாரியங்களின் நம்பிக்கை வீணாகிறது. இதுபோன்ற செயல்களை முதலில் நிறுத்த வேண்டும்.
சிட்னியில் பயிற்சி
ஆஸ்திரேலியாவின் முன்னணி ஸ்பின்னர்களை சிட்னியில் ஒன்றுக்கூட வைத்தார்கள். அங்கு இந்தியாவில் இருப்பதை போன்றே களத்தை உருவாக்கி, எப்படி விளையாடலாம் என்று பயிற்சி பெற்றார்கள் என ஹீலி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சமீபத்தில் விளையாடிய தொடரிலும் ஆஸ்திரேலிய அணி உள்நாட்டிலேயே பிட்ச்-ஐ தயார் செய்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.