யூஏஇயில் நடைபெறுகிறது
ஐபிஎல் 2020 தொடர் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவில்லை. மாறாக யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் மகளிர் டி20 சேலஞ்சர் தொடர் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 1 முதல் 10 வரை நடைபெறுகிறது
நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதிவரை மகளிர் டி20 சேலஞ்சர் போட்டிகள் ஐபிஎல் போட்டிகளுடன் இறுதியில் நடத்தப்படும் என்றும் மொத்தம் 3 அணிகள் இடம்பெறும் இந்த தொடரில் 4 போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மானக்கேடானது என குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த அறிவிப்பு ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 29ம் தேதி வரை அந்த நாட்டின் மகளிர் பிக் பாஷ் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் நிர்வாகிகளின் இந்த அறிவிப்பு மிகவும் மானக்கேடானது என்று ஆஸ்திரேலிய வீராங்கனை ரேச்சல் ஹேனஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய வீராங்கனைகளின் நிலை என்ன?
இந்த லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீராங்கனைகளும் கையெழுத்திட்டுள்ள நிலையில், அவர்களின் நிலை என்ன என்று அலிசா ஹீலியும் கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு, இரண்டு தொடர்களும் பாதிக்காத வண்ணம் தேதிகளை வடிவமைக்க வேண்டும் என்று போரியா மஜூம்தார் இதழ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சூசி பேட்சும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.